புது டெல்லி: வாகனங்களின் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் நவம்பர் மாதம் கார்களின் விற்பனை 19.38 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த நவம்பரில் 83,059 கார்கள் விற்பனை ஆகி உள்ளன.
சென்ற வருடம் நவம்பர் மாதம் 1,03,031 கார்கள் விற்பனையானது.
இதே போல் இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனையும் 14.68 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த நவம்பரில் 5,67,502 இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.
சென்ற வருடம் நவம்பர் மாதம் 6,65,181 இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையானது.
இதில் மோட்டார் பைக் விற்பனை 20.24 விழுக்காடு குறைந்துள்ளது. நவம்பர் மாதம் 4,31,171 மோட்டார் பைக் விற்பனை ஆகியுள்ளது.
சென்ற வருடம் நவம்பரில் 5,40,553 மோட்டார் பைக் விற்பனையானது.
இந்த நவம்பரில் கனரக வாகனங்களின் விற்பனை அதிக அளவு குறைந்துள்ளது.
இந்த ரக வாகனங்கள் 20,637 எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை ஆகி உள்ளது. இது சென்ற நவம்பருடன் ஒப்பிடுகையில் 49.52 விழுக்காடு குறைவு.
சென்ற நவம்பரில் 40,879 கனரக வாகனங்கள் விற்பனையானது.
வங்கிகளின் வட்டி உயர்வு, நிதி தட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ளதால், வாகன உற்பத்தி துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் உட்பட பல வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைத்துள்ளன. இதனால் இவைகளுக்கு உதிரி பாகங்களை தயாரித்து கொடுக்கும் லட்சக்கணக்கான தொழிற்சாலைகள், குறிப்பாக சிறு, குறுந்தொழில் பிரிவில் உள்ள தொழிற்டசாலைகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இவற்றில் வேலை பார்த்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.