டாடா மோட்டார் உற்பத்தி நிறுத்தம்!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (16:38 IST)
ஜாம்ஷெட்பூர்: டாடா மோட்டாரநிறுவனம் ஜாம்ஷெட்பூர் கனரக வாகன தொழிற்சாலையின் உற்பத்தியை இன்று முதல் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சரக்கு போக்குவரத்தும் குறைந்துள்ளது. புதிய வாகனங்கள் விற்பனையாகமல் தேங்கி கிடக்கின்றன.

ஏற்கனவே கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் அசோக் லேலண்ட், வேலை நாட்களை ஐந்து நாட்களாக குறைத்துள்ளது.

இதே போல் கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் மற்றொரு நிறுவனமான டாடா மோட்டார், ஜாம்ஷெட்பூர் வாகன தொழிற்சாலையின் உற்பத்தியை இன்று முதல் வருகின்ற 29 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நிறுத்தி வைத்துள்ளது.

இங்கு லாரிகள், பேருந்துகள், டிரைலர், அதிக பாரத்தை ஏற்றிச் செல்லும் பல அச்சுக்கள் பொருத்தப்பட்ட லாரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஏற்கனவே நான்கு முறை உற்பத்தியை நிறுத்தி உள்ளது. கடைசியாக நவம்பர் 5 முதல் 9 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் உற்பத்தியை நிறுத்தியது.

இந்த உற்பத்தி நிறுத்தம் குறித்து டாடா மோட்டார் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், தொழில் நிறுவனங்களுக்கு நிதி கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் வட்டி அதிக அளவு உள்ளன. இதனால் வாகனங்களை வாங்குபவர்கள், புதிய வாகனம் வாங்கும் முடிவை தள்ளிப் போடுகின்றனர்.

இதனால் விற்பனைக்கு ஏற்றவாறு, உற்பத்தியை குறைக்க வேண்டியதுள்ளது. இல்லையெனில் தொழிற்சாலையிலும், மொத்த விற்பனையாளர்களிடமும் உற்பத்தி செய்த வாகனங்கள் தேக்கமடையும்.

மார்ச் மாதம் தினசரி 500 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. சமீபகாலமாக தினசரி 150 வாகனங்களே உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளதால், இந்த தொழிற்சாலைக்கு தேவைப்படும் உதிரி பாகங்களை தயாரித்து கொடுத்த அதியாபூர் தொழில் பேட்டை வளாகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான குறு, சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் டாடா மோட்டார்ஸ் 3 ஆயிரம் தற்காலிக தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்