வீடு, கட்டிடங்கள் விலை குறையும்!

திங்கள், 24 நவம்பர் 2008 (13:05 IST)
புதடெல்லி: வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகங்களின் விலை 5 விழுக்காடு வரை குறைப்பது என்று ரியல் எஸ்டேட் டெவலப்பர் அசோசிசன் அறிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடியால் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த துறையில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் கட்டி முடித்த அல்லது முடிக்கும் தருவாயில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள் விற்பனை ஆகாமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல கோடி ரூபாய் முதலீடு, முடங்கிபோ போய் உள்ளது.

இவற்றின் விற்பனையை அதிகரிக்கவும், ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்களின் வர்த்தகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர, விலைகள் குறைக்க வேண்டும் என்று வங்கிகள் உட்பட பல்வேறு அமைப்புக்கள் ஏற்கனவே கருத்து வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய தொழில் கூட்டமைப்பும், உலக பொருளாதார அமைப்பும் சேர்ந்து புது டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் செவ்வாய்க்கிழமை பேசும் போது, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், விலையை குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த ஆலோசனையை வரவேற்ற ரியல் எஸ்டேட் டெவலப்பர் அசோசிசன், வீடு, குடியிருப்பு, வணிக வளாகங்களின் விலையை 5 விழுக்காடு வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து நேஷனல் ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் கவுன்சில் தலைவர் ரோக்தாஸ் கோயல் கூறுகையில், நிதி அமைச்சரின் கருத்துகளை ஏற்று, எங்கள் சங்க உறுப்பினர்களிடம் தற்போது கட்டி முடிக்கப்பட்டு உள்ள கட்டிடங்களின் விலையை மறுபரிசீலனை செய்யுமாறும், தற்போது வாங்குபவர்களுக்கு விலையில் தள்ளுபடி செய்து கொடுக்கும் படி கூறியுள்ளோம். அத்துடன் எதிர்காலத்தில் கட்டும் கட்டிடங்களின் விலையை 5 முதல் 10 விழுக்காடு வரை குறைக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

இதனால் குடியிருப்புகளின் விலை 10 முதல் 15 விழுக்காடு வரை குறையும் என்று கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களான அன்ஸால் ஏ.பி.ஐ: ஒமாக்ஸி, அசோடெக் போன்றவை விலையை குறைக்க சம்மதித்துள்ளன. பெங்களூர் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஷோபா டெவலப்பர்சும் விலை குறைப்பது பற்றி பரிசிலீப்பதாக தெரிவித்துள்ளது என்று கூறினார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, ரியல் எஸ்டேட் துறையின் சில ஆலோசகர்கள், டெல்லி தலைநகர் பிராந்தியத்தில் வீடு, குடியிருப்பு விலை 10 முதல் 15 விழுக்காடு வரை குறைய வாய்ப்பு உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.

இங்கு 2005 ஆம் ஆண்டில் இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்குள் விலை 100 விழுக்காடு முதல் 200 விழுக்காடு வரை அதிகரித்துள்ளன.

இந்த அறிவிப்பை வரவேற்று, இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இந்த முயற்சியை வரவேற்கின்றோம். இதன் படி விலையை குறைப்பது பற்றி பரிசீலிப்போம் என்று கூறினார்.

மற்றொரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப் குழுமத்தின் செயல் இயக்குநர் ராஜீவ் தல்வார் கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு நிறுவனங்களும் சந்தை நிலவரத்தை பொறுத்து விலையை குறைக்கும். எனவே விலை குறைவதால், குடியிருப்புகளை வாங்க முன்வருவார்கள் என்று கூறினார்.

கடந்த மூன்று வருடங்களில் குடியிருப்புக்கள், வணிக வளாகங்கள், அலுவலகம் போன்றவைகளின் விலை தொடர்ந்து அதிகரித்தன. இவற்றின் விலை உயர்வால், வாடகையும் அதிகரித்து.

ஏழை நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு என்பதே கனவு இல்லாமாக மாறியது. பெரிய நகரங்களிலும், அதனை ஒட்டி உள்ள நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது, சிறிய ஊர்களில் கூட வீடு, காலி மனைகளின் விலை பல மடங்காக எகிறியது. தற்போதைய நெருக்கடியால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்