உலக வங்கி 100 பில்லியன் டாலர் உதவி!

புதன், 12 நவம்பர் 2008 (16:38 IST)
புது டெல்லி: பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வளரும் நாடுகளுக்கு 100 பில்லியன் டாலர் கடன் உதவி அளிக்க உலக வங்கி முன்வந்துள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், வருகின்ற சனிக்கிழமை ஜீ-20 நாடுகளின் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், இந்தியா. சீனா, பிரேசில் ஆகிய நாட்டின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் சார்பில் பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் உலக வங்கியின் துணை அமைப்பான மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி [ International Bank for Reconstruction and Development (IBRD)] வளரும் நாடுகளுக்கு 100 பில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இது அடுத்த மூன்று வருடங்களில் வழங்கப்படும்.

இந்த வங்கி ஏற்கனவே வளரும் நாடுகளுக்கு, இந்த வருடம் 35 பில்லியன் டாலர் கடன் வழங்கி உள்ளது. இது சென்ற வருடம் வழங்கியதை விட சுமார் மூன்று மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது. (சென்ற வருடம் வழங்கிய கடன் 13.5 பில்லியன் டாலர்).

இந்த கடன் வளரும் நாடுகளில் அதிக அளவு பாதித்துள்ள நாடுகளின் அரசு நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்) ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்டவும், நீண்ட கால வளர்ச்சிக்கு தகுந்தாற்போல் முதலீடு செய்யவும் பயன்படுத்த வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்