பொருளாதார நெருக்கடி இந்தியாவிற்கும் பாதிப்பு- ஐ.எம்.எப்.

வியாழன், 9 அக்டோபர் 2008 (16:47 IST)
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, ஆசியாவில் பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளையும் (இந்தியா போன்ற) பாதிக்கும். இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று ஐ.எம்.எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நிதியம் [International Monetary Fund (IMF)] கூறியுள்ளது.

சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ஐ.எம்.எப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) 2008 ஆம் ஆண்டில் 7.9 விழுக்காடாக குறையும். அடுத்த வருடம் மேலும் குறைந்து 6.9 விழுக்காடாக இருக்கும் என்று கணித்துள்ளது.

ஐ.எம்.எப் அறிக்கையின் படி, 2006 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.8%, 2007 ஆம் ஆண்டில் 9.3% ஆக இருந்தது.

இந்தியாவில், இந்த ஆண்டில் இரண்டாவது காலாண்டில் முதலீடு குறைவதால், இதன் பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடாக குறையும்.

ஆசிய நாடுளின் பொருளாதார வளர்ச்சி, 2008 ஆம் ஆண்டு 7.7% குறையும். இதே போல் 2009 ஆம் ஆண்டில் 7.1% குறையும்.

செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நெருக்கடியால், முதலீட்டாளர்களுக்கு வளர்ச்சி பற்றி கருத்து மாறியுள்ளது. அத்துடன் முதலீடுக்கு ஏற்படும் இடர்பாடுகள் பற்றிய கருத்தும் மாறியுள்ளது. இதனால் நிதி சந்தை பலவீனமடைந்துள்ளது.

சில நாடுகளில் உள்ள வங்கிகள், நிதி சந்தையில் கடன் வாங்குவது அதிகரிக்கும். இதனால் இந்த வங்கிகள் பாதிக்கப்படும் என்று ஐ.எம்.எப் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்