உலக நிதி நெருக்கடி மாநாடு- இந்தியாவுக்கு அழைப்பு!

திங்கள், 6 அக்டோபர் 2008 (12:39 IST)
லண்டன்: அமெரிக்க நிதி நெருக்கடியால் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வுகாணும் ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவரும், பிரான்ஸ் அதிபருமான நிகோலஸ் சர்கோஸி நேற்று பாரிசில் அவசரமாக செய்தியாளர்களை கூட்டத்தை கூட்டினார்.

இதில் அவர் பேசுகையில், உலக நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்க நவம்பர் மாதம் ஜி-8 நாடுகளின் (ஜி-8 அமைப்பில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன) மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளும் பங்கேற்க வேண்டும்.

60 வருடங்களுக்கு முன்பு ஃப்ரிட்டன் உட்ஸ் (Bretton Woods) புதிய பொருளாதார முறையை ஏற்படுத்தினார். அதேபோல் இப்போது ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள அதிக பொருளாதார வலிமை வாய்ந்த நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன்,இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களும், மற்ற நாடுகளின் தலைவர்களுடன் ஒன்றினந்து புதிய பொருளாதார முறையை ஏற்படுத்த வேண்டும்.

நாம் உலக பொருளாதார முறையை மீண்டும் கட்டியமைக்க வேண்டும். நாம் தொழில் முனைவோர்களின் மூதலீடுகளை பெறுவதற்கான அடித்தளமிட வேண்டும். ஊக வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீடுகளை அல்ல. அரசுகள் ஊக வணிகத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறினார்.

ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி நான்கு நாடுகளும் இணைந்து அவசர நிதியாக உடனடியாக 24 பில்லியன் டாலர் நிதி உதவி செய்ய முடிவெடுத்துள்ளன.

இவை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்ய பயன்படுத்தப்படும். அத்துடன் கூடிய விரைவில் 12 பில்லியன் பவுன்ட் நிதி உதவி வழங்க உள்ளன.

அதே நேரத்தில் ஜெர்மனி, பொதுமக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வங்கிகளுக்கு நிதி உதவி அளிப்பதற்கு தொடர்ந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்