தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேண்டுகோள்!

வியாழன், 2 அக்டோபர் 2008 (17:52 IST)
திருப்பூர் : தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை மேம்படுத்த முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்று மத்திய ஜவுளித் துறஇணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக் கொண்டார்.

இந்திய தொழில்கூட்டமைப்பு, தென்னிந்திய பருத்தி ஆராய்ச்சிக் கழகம், மத்திய ஜவுளிக் குழு மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் ஆகியவை சார்பில் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து கருத்தரங்கு திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ. சக்திவேல் தலைமை வகித்தார்.

மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும் போது, இந்தியாவில் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்கான வாய்ப்பு (டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்) அதிகரித்து வருகிறது.

விமானம், கலை, கட்டுமானம், பாதுகாப்புத்துறை, மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி பொருட்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் மொத்த ஜவுளி உற்பத்தியில், தொழில்நுட்ப ஜவுளியின் பங்கு 10 விழுக்காடாக மட்டுமே உள்ளது.

இத்தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை மேம்படுத்த மத்திய அரசு நிபுனர் குழுவை (ஈசிடிடி) அமைத்துள்ளது. இந்த குழு நாட்டின் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி சந்தைமதிப்பு கடந்த 2003-04 நிதி ஆண்டில் ரூ. 19,130 கோடி என தெரிவித்தது. இது 2007-08 நிதி ஆண்டில் ரூ. 29,579 கோடியாக இருக்கும் என கணித்துள்ளது.

உலக அளவில் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. இந்த ஜவுளிகளின் உற்பத்தி இந்தியாவில் குறைந்த அளவாகவே உள்ளது.

எனவே தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் அதிக முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

இத்தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை மேம்படுத்த மத்திய அரசு 5 விழுக்காடு கலால் வரிச்சலுகை வழங்குகிறது. அத்துடன் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் 10 விழுக்காடு முதலீட்டு மானியமும், 5 விழுக்காடு வட்டி மானியமும் வழங்குகிறது.

எனவே இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை மேம்படுத்த தொழில் முனைவோர்கள் முன்வரவேண்டும் என்று இளங்கோவன் கூறினார்.


அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, வளர்ந்த நாடுகளில் 50 விழுக்காடு தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி செய்யப்படும் நிலையில், இந்தியாவில் இதன் பங்கு 4% மட்டுமே என்று தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் இந்திய தொழிற்கூட்டமைப்பு இயக்குநர் ராய், பண்ணாரி மாரியம்மன் ஸ்பின்னிங் மில் இயக்குநர் எஸ்.கே.சுந்தரராமன், ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் துணைத்தலைவர் லலித்கௌல், பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கத் (நிட்மா) தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்