பசுந்தேயிலைக்கு அதிக விலை: விவசாயிகள் மகிழ்ச்சி!

வியாழன், 25 செப்டம்பர் 2008 (12:04 IST)
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை விவசாயிகளுக்கு பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.15 கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலக அளவில் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது. குறிப்பாக கென்யாவில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக தேயிலை உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், கென்யாவிலிருந்து தேயிலைத்தூளை இறக்குமதி செய்து வந்த எகிப்து, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் தற்போது இந்தியாவில் இருந்து தேயிலை வாங்க ஆரம்பித்துள்ளன. அத்துடன் அஸ்ஸாம் போன்ற வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம், வறட்சி போன்ற காரணங்களால் அங்கு தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வட மாநில தேயிலை வர்த்தகர்களும் குன்னூர் தேயிலை சந்தையில் கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

முன்பு நீலகிரி பகுதிகளில் இருந்து ரஷியாவிற்கு அதிக அளவு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. அப்போது தேயிலை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது. பிறகு தேயிலை தரம், விலை உயர்வு, அரசியல் நெருக்கடி போன்ற காரணங்களினால் நீலகிரி தேயிலை ரஷியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறைந்தது.

தேயிலை விவசாயிகள் பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.18 வரை குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இதன் காரணமாக தேயிலை விலை கிலோ ரூ.15 என நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது உலக சந்தையில் தேயிலை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நீலகிரி பகுதி தேயிலைக்கு விற்பனை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத்தூள் விலை கிலோ ரூ.36 என்ற அளவில் இருந்தது. தேயிலை தேவை அதிகரித்துள்ளதால், சென்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து தேயிலை விலை அதிகரித்துள்ளது. தற்போது சராசரியாக கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரத்தில் தேயிலை விலை கிலோ ரூ.100 க்கும் அதிகமாக இருந்தது. முன்பு தேயிலை கிலோ ரூ.36 என்ற அளவில் இருந்த போது, பசுந்தேயிலை கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.6 வரையே கிடைத்தது.

தற்போது தேயிலை விலை அதிகரித்துள்ளதால், பசுந்தேயிலை விலையும் கிலோ ரூ.15 வரை உயர்ந்துள்ளது. அடுத்த மாதங்களில் இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்