வர்த்தக நிறுவனங்களை அமைக்க மலேசிய அமைச்சர் அழைப்பு!

செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (13:57 IST)
இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக, தொழில் நிறுவனங்கள், பிராந்திய அலுவலகங்களை மலேசியாவில் அமைக்க முன்வர வேண்டும் என்று மலேசிய தொழில் அமைச்சர் முகைதீன் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.

கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற மலேசியா-இந்தியா தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டத்தில் முகைதீன் யாசின் உரையாற்றினார்.

அப்போது அவர், இந்தியாவைச் சேர்ந்த தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மலேசியாவில் பிராந்திய அலுவலகங்களை தொடங்க முன்வர வேண்டும்.

ஆசியன் அமைப்பு நாடுகளுடன் வர்த்தகம் செய்ய, மலேசியா மையநாடாக உள்ளது. ஆசியன் அமைப்பு நாடுகளில் மொத்தம் 560 மில்லியன் மக்கள் உள்ளனர். இந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.

அடுத்த வருட தொடக்கத்தில் ஆசியன்- இந்தியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அமலுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கின்றோம். இதனால் இந்தியாவிக்கும், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் அதிகரிக்கும்.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், இந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 5.33 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது இந்த வருட முடிவில் 10 பில்லியன் டாலரை எட்டிவிடும்.

சென்ற வருடம் 7.88 பில்லியன் டாலராக இருந்தது.

மலேசியாவின் தகவல் தொடர்பு துறையிலும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. இந்த துறை நிறுவனங்கள் மலேசியாவில் மல்டிமீடியா சூப்பர் காரிடாரில் அமைந்துள்ளன.

இங்கு இந்தியாவைச் சேர்ந்த பயிற்சியும், திறனும் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்று முகைதீன் யாசின் கூறினார்.



வெப்துனியாவைப் படிக்கவும்