இந்திய வங்கிகளுக்கு ஆபத்து இல்லை-சிதம்பரம்!

வியாழன், 18 செப்டம்பர் 2008 (16:31 IST)
அமெரிக்காவில் நிதி சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், பொதுத்துறை வங்கிகளுக்கு ஆபத்து இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

அமெரிக்காவின் ஒரு சில முதலீட்டு நிறுவனங்களும், காப்பீடு நிறுவனமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சிதம்பரம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், அமெரிக்க நெருக்கடியால், நமது பொதுத்துறை வங்கிகள் பாதிக்கப்படாது. இதில் நமது வங்கிகள் சம்பந்தப்படவில்லை. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மட்டும் சிறிய அளவு முதலீடு செய்துள்ளது.

இங்கு தற்போது கடன் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. இந்த பிரச்சனையில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி வருகிறது என்று கூறினார்.

அமெரிக்கன் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியை தீர்க்க, அதை அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துடன் டாடா இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்துமா என்று கேட்டதற்கு சிதம்பரம் பதிலளிக்கையில், காப்பீடு துறையை கட்டுப்படுத்தும் இர்டாவிடம், டாடா நிறுவனத்தை சேர்ந்தவர்கள், டாடா-ஏ.ஐ.ஜி. காப்பீடு நிறுவனம் செலுத்த வேண்டிய பணம் கொடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி மற்றும் முதலீடு நிறுவனங்களான லீமென் பிரதர்ஸ் ஹோல்டிங் திவாலா தாக்கீது கொடுத்துள்ளது. நெருக்கடியில் உள்ள மற்றொரு நிறுவனமான மெர்ரில் லிஞ்ச்சை, பாங்க் ஆப் அமெரிக்கா வாங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இதில் திவாலாவான லீமென் பிரதர்ஸ் நிறுவனத்தில், இந்தியாவின் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு சொந்தமாக, லண்டன் துணை நிறுவனம் ரூ. 375 கோடி (57 மில்லியன் யூரோ) முதலீடு செய்துள்ளது.



வெப்துனியாவைப் படிக்கவும்