இந்தியா-ஆசியன் நாடுகள் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம்!

வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (13:07 IST)
இந்தியாவுக்கும், ஆசியன் அமைப்பு நாடுகளுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆசியன் அமைப்பில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, புருனே, கம்போடியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பத்து நாடுகள் உறுப்பினராக உள்ளன.

ஆசியன் அமைப்பு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடந்த ஆறு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்த ஒப்பந்தம் குறித்து சிங்கப்பூரில் மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத், ஆசியன் அமைப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது கமல்நாத் கூறுகையில், கிழக்காசியாவில் உள்ள நாடுகள் வளர்ச்சியை அடைந்து வருகின்றன. உலக பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு, இந்த நாட்டு மக்களின் வாங்கும் சக்தி முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்தியாவிற்கு இந்த நாடுகளின் தேவைகளை பற்றி அறிந்து கொள்ளவும், இந்தியாவை பற்றி இந்த நாடுகள் அறிந்து கொள்ள ஆறு வருடங்கள் ஆகி உள்ளது என்று கூறினார்.

சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் லீ ஹங் கியாங் கூறுகையில், இந்தியா தயாராக இருந்தால், ஆசியன் நாடுகள் சேவை துறை மற்றும் முதலீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக கூறினார்.

இந்தோனேஷிய வர்த்தக அமைச்சர் மரியு பெங்குஸ்டு பேசுகையில், இதற்கு முன் இல்லாத வகையில் இரு தரப்பிலும் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசியன் நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடேயை அதிக அளவு கருத்தொற்றுமை ஏற்படும் என்று கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி, இந்தியாவுக்கும், ஆசியன் அமைப்பு நாடுகளுக்கும் இடையே பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் வரி கட்ட வேண்டியதில்லை. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பொருட்கள் பற்றி விரிவாக அறிவிக்கப்படும்.

சேவை துறை, முதலீடு ஆகியவை குறித்த பேச்சுவார்த்தை அடுத்த வருடத்திற்குள் முடிக்கப்படும். ஆசியன் அமைப்பு சார்பில் இந்தியாவுடன் முதலீடு பற்றி மலேசியா பேச்சுவார்த்தை நடத்தும்.

சிங்கப்பூர் சேவை துறை பற்றி பேச்சுவார்த்தை நடத்துமஎன அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்