டாடாவுக்கு அம்பானி ஆதரவு!

வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (11:27 IST)
டாடா நிறுவனத்தின் கார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

டாடா மோட்டார் நிறுவனம், மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ ரக கார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து வருகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்திய நிலத்தில் 400 ஏக்கரை விவசாயிகளுக்கு திருப்பி தர வேண்டும் என்று கோரி திரிணாமுல் காங்கிரஸ் கடந்த ஐந்து நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறது.

இது தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் சேர்மன் முகேஷ் அம்பானி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாதிரியான திட்டங்களை மன உளைச்சல் ஏற்படுத்தி தாமதப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. இந்த மாதிரியான நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். அத்துடன் அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில், எதிர் மறையான கருத்து ஏற்படும்.

இந்தியாவால் சிறிய ரக கார் தயாரிக்க முடியும் என்று நிரூபிப்பதற்கு நானோ ரக கார் திட்டம் முக்கியமானது. இது தனித்தன்மை வாய்ந்த திட்டம். அத்துடன் புதிய முயற்சியும் கூட.

இந்த மாதிரியான திட்டங்கள் உலக சந்தையில் இந்தியா போட்டி போடுவதற்கும், உள்நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கவும் மிக அவசியம். இதற்கு தொழில் நிறுவனங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

இந்திய அரசியல் தலைவர்களும், தொழில் துறையினரும் சேர்ந்து நகர்புறத்திலும், கிராமப்புறத்திலும் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நவி, மும்பையில் முகேஷ் அம்பானி அமைக்க உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம், மும்பை சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனமும் நிலம் கையகப்படுத்துவதில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்