பணவீக்கம் 12% தாண்டியது!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (11:57 IST)
பணவீக்கம் 12 விழுக்காட்டை தாண்டி, 12.01 விழுக்காடாக அதிகரித்தது.

மத்திய அரசு நேற்று மாலை ஜூலை 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான பணவீக்கம் 12.01 விழுக்காடாக உயர்ந்திருப்பதாக அறிவித்தது. 1995 ஆம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, தற்போதுதான் இந்த அளவு பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 11.98 விழுக்காடாக இருந்தது.

மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. ஜூலை 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உயர்ந்து இருப்பதற்கு முக்கிய காரணம் உணவுப் பொருட்களான பழங்கள், பால், மசாலா பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன் விலை அதிகரித்திருப்பதுதான்.

அத்துடன் இரும்பு, உருக்கு, எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு அதிகரித்த பெட்ரோல், டீசல் விலையின் தாக்கத்தால் எல்லா சரக்கு கட்டண உயர்வும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு ஒரு காரணம்.

பணவீக்கத்தை கட்டு‌படுத்தவும், பணப்புழக்கை குறைக்கவும் சென்ற வாரம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம், வங்கிகளின் ரொக்க இருப்பு விகித‌த்தை அதிகரித்தது. இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் பணவீக்கம் 7 விழுக்காடாக குறையும் என்று ரிச்ர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.

மொத்த விலை பட்டியலில் ஜூலை 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பழங்கள் விலை 10.32%, மசாலா பொருட்கள் 13%, முட்டை, இறைச்சி, மீன் விலை 7%, பாலவிலை 8% அதிகரித்துள்ளது.

இதே போல் சமையல் எண்ணெய் விலை 17%, இரும்பு மற்றும் உருக்கு பொருட்கள் விலை 35%, உயர்ந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்