மருந்து விலை உய‌ர்‌கிறது?

புதன், 30 ஜூலை 2008 (18:40 IST)
உயிர் காக்கும் மருந்துகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட 70 வகையான மருந்து விலை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

தேசிய மருந்துகள் விலை கட்டுப்பாடு ஆணையம் மருந்துகளின் விலையை நிர்ணயித்து வருகிறது. இதனிடம் சில ரக மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு, மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் கோரி வருகின்றன.

இந்த ஆணையத்தின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதி கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

மருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்க பயன்படும் சிப்ரோப்ளக்சின் மற்றும் ஒப்ளோக்சின் ஆகிய மூலப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையையும் அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரி வருகின்றன.

இதை நாளை நடைபெறும் தேசிய மருந்துகள் விலை கட்டுப்பாடு ஆணைய கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது. இதில் நோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை உயர்த்த அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருந்துகள் துறையை சேர்ந்த அதிகாரிகளும், தேசிய மருந்துகள் விலை கட்டுப்பாடு ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகளும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்களை (மருந்துகள்) உற்பத்தி செய்யும் நிறுவனங்களை பற்றி ஆய்வு செய்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக சீனாவில் இருந்து மூலப் பொருட்கள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் உள்நாட்டில் மூலப் பொருட்களை உற்பத்தி செய்து வந்த நிறுவனங்கள் கடுமையக பாதிக்கப்பட்டன. இப்போது இதன் நிலைமை பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

இது பற்றி அதிகாரி கூறுகையில், மருந்து தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களை தயாரிக்கும் சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சில நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த கூட்டத்தில் இதை பற்றி மட்டும் பரிசீலிக்கப்படவில்லை. மற்ற மூலப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனஙகளில் பயன் படுத்தாமல் உள்ள வசதிகளை பயன்படுத்துவது. அதன் மூலம் மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்