ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை வெளியானது எப்படி? விசாரிக்க உத்தரவு!

புதன், 30 ஜூலை 2008 (13:34 IST)
ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கை அதிகார‌ப்பூர்வமாக வெளியிடும் முன்பு செய்தி ஊடகங்களில் வெளியானது எப்படி என்பது பற்றி விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி. ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி நேற்று நண்பகலில் இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டது. இது நண்பகல் 12 மணியளவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். அதற்கு முன் ஊடகங்கள் பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள தகவல்களை (தெரிந்திருந்தாலும்) வெளியிடக் கூடாது.

ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் நிதி சந்தை, பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காக அதிகாரபூர்வமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிக்கும் வரை வெளியிடக்கூடாது.

ஆனால் நேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே, ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள், சில தொலைக்காட்சிகள் உட்பட பல்வேறு ஊடகங்களில் செய்திகளாக வெளியானது.

மும்பையில் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் ரிச்ர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி.ரெட்டி ஆய்வறிக்கையை வெளியிடும் அறையில் குழுமியிருக்கும் செய்தியாளர்கள், நிச்சயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பு, இதில் உள்ள தகவல்களை வெளியிடக்கூடாது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி, பொருளாதார ஆய்வறிக்கை பற்றிய செய்தியை சேகரிக்க வந்துள்ள செய்தியாளர்கள், இதில் அடங்கி உள்ள தகவல்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் ரிசர்வ் வங்கியில் இருந்து அனுபப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை இ-மெயில் வாயிலாக சில ஊடகங்களுக்கு காலை 11.20 மணியளவில் கிடைத்து விட்டது.

இந்த இ-மெயிலில் இடம் பெற்று இருந்த தகவல்களை நிர்ணயிக்கப்பட்ட நேரமான 12 மணிக்கு முன்னரே சில தொலைகாட்சிகளும், நியுஸ் ஏஜென்சிகளும் அறிவித்து விட்டன.

இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரெட்டி, பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு எப்படி வெளியானது என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்