வங்கிகளின் வட்டி விகிதத்தை அதிகரித்தது ரிசர்வ் வங்கி

செவ்வாய், 29 ஜூலை 2008 (13:00 IST)
வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அரை விழுக்காடு அதிகரித்ததுள்ளது. முன்பு 8.5 விழுக்காடாக இருந்த வட்டி விகித்ததை 9 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

இதே போல் வங்கியன் ரொக்க கையிருப்பு விகிதத்தை கால் விழுக்காடு உயர்த்தியது.

ரிசர்வ் வங்கி இன்று காலண்டு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டது. பணவீக்கம் 12 விழுக்காடு வரை உயர்ந்திருப்பதை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன்படி வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை (repo rate) 8.5 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

சென்ற மாதம் 24ஆம் தேதி வட்டி விகிதத்தை அரை விழுக்காடு அதிகரித்தது. இதையுன் சேர்த்து ஒரு மாத காலத்தில் 1 விழுக்காடு வங்கி வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

வங்கிகள் திரட்டும் வைப்பு நிதியில் இருந்து குறிப்பிட்ட விழுக்காடு ரிசர்வ் வங்கியில் வைப்பு நிதியாக வைக்க வேண்டும். இது ரொக்க கையருப்பு விகிதம் (Cash Reserve Ratio- CRR) என்று அழைக்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை கால் விழுக்காடு அதிகரித்துள்ளது. முன்பு 8.75 விழுக்காடாக இருந்தது. இப்போது 9 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய ரொக்க கையிருப்பு விகிதம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும்.

வங்கிகளிடம் இருந்து குறுகிய காலத்திற்கு ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி (reverse repo rate) விகிதம் மாற்றப்படவில்லை. இது முன்பு இருந்த அளவான 8.75 விழுக்காடாகவே நீடிக்கும்.

இதே மாதிரி வங்கிகள் நீண்ட காலக் கடன் வழங்க அடிப்படையாக கொள்ளும் வட்டி விகிதமும் 6 விழுக்காடாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிதி ஆண்டில் முதல் காலாண்டு பொருளாதார ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி மும்பையில் வெளியிட்டார்.

இதில் விலை உயர்வை கட்டுப்படுத்துவது, பணவீக்கத்தை குறைப்பது ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்