குறைந்த எரிபொருள் காருக்கு சலுகை வழங்கலாம்!

புதன், 16 ஜூலை 2008 (13:54 IST)
குறைந்த அளவு பெட்ரோல், டீசலில் அதிக தூரம் ஓடும் வாகனங்களுக்கும், குறைந்த மின்சக்தியை பயன்படுத்தும் நுகர்வோர் பொருட்களுக்கும் வரிச் சலுகை வழங்கலாம் என்று மத்திய மின்துறை செயலாளர் அனில் ராஜ்தான் கூறினார்.

அதே நேரத்தில் பெரிய அளவு வணிக வளாகங்கள், குடியிருப்புகள் ஆகியன அவைகளின் தேவைக்கான மின்சாரத்திற்கு சொந்த மின் உற்பத்தி நிலையங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அனில் ராஜ்தான் கூறினார்.

புதுடெல்லியில் “நகர்புறத்தில் மின்மயமாக்கல்” என்ற இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் மத்திய மின்துறை செயலாளர் அனில் ராஜ்தான் பேசும் போது, குறைந்த அளவு பெட்ரோல், டீசல், எரிவாயுவில் அதிக தூரம் ஓடும் வாகனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கலாம். 25 மெகாவாட் அளவு மின்சாரத்திற்கும் அதிகமாக பயன்படுத்தும் தணியார் வணிக நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் சொந்த மின் உற்பத்தி நிலையங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயமாக்க வேண்டும்.

இவை மொத்த மின் தேவையில் 15 முதல் 20 விழுக்காடு வரை சூரிய ஒளியில் இருந்து மின் உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

உதாரணமாக, ஜப்பான் எரிசக்தியை பயன்படுத்துவதில் சிக்கனமாக இருக்கும் நாடு. இந்த நாட்டு வாகன தயாரிப்பாளர்கள் குறைந்த அளவு எரிசக்தியில் அதிக தூரம் ஓடும் வாகனங்களை தயாரிக்கின்றனர். இந்த மாதிரியான வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஜப்பான் அரசு தாராள வரிச் சலுகை வழங்குகிறது.

பெரு நகரங்களில் வாகன போக்குவரத்து நெருக்கடி சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் நேரத்திலும், நாற்சந்திப்பை கடக்கும் நேரத்திலும் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. இதனால் நேரமும், எரிபொருளும் விரையமாகிறது.

இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு ஜெர்மனியில் உள்ளது போல் “அதிவிரைவு சாலைகளை” அமைக்கலாம்.

தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் அதி விரைவு சாலைகள் அமைப்பது தவிர்க்க முடியாதது.

ஒரு இடத்தில் மின் உற்பத்தி செய்து, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லல், விநியோகம் போன்றவைகளுக்கு பதிலாக, அந்த பகுதி அளவிலேயே மின் உற்பத்தி, விநியோகம் செய்வது அதிக பயனுள்ளதாக இருப்பது நிருபணமாகியுள்ளது.

தற்போதைய முறையிலான மின் உற்பத்தி, காற்று, சூரிய ஒளி போன்ற மரபுசாரா முறையில் சிறிய அளவு மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது சிறந்த வழியாகும். இவை அமைந்துள்ள பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிக்கு மின்சாரம் விநியோகிக்கலாம். இதனால் ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு மின்சாரம் கொண்டு செல்லும் போது ஏற்படும் இழப்பு தவிர்க்கப்படுகிறது. வோல்ட் அளவு குறையாமல் தரமான மின்சாரம் கிடைக்கும். வோல்ட் அளவை பராமரிக்க வோல்டேஜ் ஸ்டெபிலைசர், இன்வெண்டர், ஜெனரேட்டர் ஆகியவைகளை அமைக்கும் செலவை தவிர்க்கலாம்.

மாவட்ட அளவில் தற்போதைய மற்றும் எதிர்கால மின் தேவை பற்றி விரிவாக திட்டமிட வேண்டும் என்று அனில் ராஜ்தான் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்