உணவு தானிய விலை 2012 வரை குறையாது!

செவ்வாய், 15 ஜூலை 2008 (12:17 IST)
உணவு தானியங்களின் விலை 2012 ஆம் ஆண்டு வரை குறைய வாய்ப்பில்லை என்று உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜூலிக் கூறியுள்ளார்.

உணவு தானியம் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆபத்தான அளவிற்கு அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் ஏழை மக்களுக்கு உணவு தானியம் வழங்கவும், மற்ற உதவிகள் செய்யவும் 10 பில்லியன் டாலர் தேவை என்று முன்பு ராபர்ட் ஜூலிக் தெரிவித்திருந்தார். இதை மீண்டும் வலியுறுத்தினார்.

கச்சா எண்ணெய் விலை, உணவு தானிய விலை உயர்வால், பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியும் குறைந்துள்ளது. இது பல நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

சென்ற வாரம் ஜப்பானில் வளர்ந்த நாடுகளின் அமைப்பான ஜி-8 நாடுகளின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இவர்கள் அதிகரித்து வரும் பணவீக்கம், குறிப்பாக கச்சா எண்ணெய், உணவு தானிய விலை அதிகரிப்பதை கட்டுப்டுத்த நடவடிக்கை எடுக்க சம்மதித்துள்ளனர்.

இது குறித்து ராபர்ட் ஜூலிக் கூறுகையில், இவர்கள்
உணவு பாதுகாப்பு பற்றி கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் இது நடைமுறைபடுத்த வேண்டும்.

இந்த கூட்டம் நடக்கும் போது நான் உணவு, கச்சா எண்ணெய் விலை பயங்கரமான அளவு உயர்ந்துள்ளது என்பதையும், இதை எதிர் கொள்ள கூடுதல் வள ஆதாரங்கள் தேவை என்பதையும் வலியுறுத்தினேன் என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், பல நாடுகள் 10 பில்லியன் டாலர் நிதிக்கு கணிசமான பங்கை செலுத்தியுள்ளன. ஆனால் இனி வரும் வருடங்களுக்கும் நிதி தொடர்ந்து தேவை என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்