தொழில் துறை உற்பத்தி 3.8 விழுக்காடு குறைந்தது!

வெள்ளி, 11 ஜூலை 2008 (18:47 IST)
வங்கி வட்டி அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களினால் தொழில் துறை அதிக அளவு பாதிப்பிற்குள்ளாகி உள்ளது.

இந்த ஆண்டு மே மாதத்தின் தொழிற்துறை உற்பத்தி 3.8 விழுக்காடாக குறைந்துள்ளது. மின் உற்பத்தி, இயந்திர தயாரிப்பு பிரிவுகளின் வளர்ச்சி குறைந்ததால் தொழில் துறை உற்பத்தி குறைந்துள்ளது.

சென்ற வருடம் மே மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 10.6 விழுக்காடாக இருந்தது.

இந்த நிதி ஆண்டில் முதல் இரண்டு மாதங்களிலும் தொழில் துறை உற்பத்தி குறைந்து உள்ளது. இதன் குறியீட்டு எண் 5% ஆக குறைந்துள்ளது. சென்ற வருடம் இதே மாதங்களில் 10.9% ஆக இருந்தது.

அதே நேரத்தில் சுரங்க துறையின் உற்பத்தி 5.2% ஆக அதிகரித்துள்ளது. சென்ற மே மாதத்தில் 3.8% ஆக இருந்தது.

இது குறித்து ஐ.சி.ஆர்.இ.ஆர். ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் ராஜிவ் குமார் கூறுகையில், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதால், தொழில் துறை வளர்ச்சி தொடர்ந்து குறையும். இதற்கு முக்கிய காரணம் அதிக வட்டி, கடன் கொடுப்பதில் சிக்கல், ஊழியர்களுக்கு அதிக சம்பளம் போன்ற காரணங்களினால் தொழில் துறை உற்பத்தி தொடர்ந்து குறையும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்