பருத்தி இறக்குமதி வரி ரத்து!

வியாழன், 10 ஜூலை 2008 (13:11 IST)
அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி இறக்குமதி வரி, கூடுதல் இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இதே போல் பருத்தி ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டு வந்த 1 விழுக்காடு ஊக்கத் தொகை வழங்கப்படாது என அறிவித்துள்ளது.

பருத்தி உற்பத்தி அதிக அளவு இருந்தும், ஏற்றுமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் தட்டு‌ப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கிறது.

இதனால் பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டு வந்த 10 விழுக்காடு இறக்குமதி வரி, 4 விழுக்காடு கூடுதல் இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ஜவுளித்துறையினர் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்வதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

தற்போது இறக்குமதி வரி ரத்து, ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை நீக்கம் போன்ற நடவடிக்கைகளால், உள்நாட்டில் பருத்தி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வருடம் 6 லட்சத்து 50 ஆயிரம் பொதி (1 பொதி 170 கிலோ) பருத்தி இறக்குமதி செய்யப்பட்டது.

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக பருத்தி உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 315 லட்சம் பொதி உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அடுத்த ஆண்டஉற்பத்தி குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பருத்தி சாகுபடி செய்யும் பரப்பளவு சுமார் 25 விழுக்காடு வரை குறைந்துள்ளது.

இத்துடன் அதிக அளவு பருத்தி விளைச்சல் காணும் பகுதிகளான மகாராஷ்டிராவின் விதர்பா, மரத்வாடா பகுதிகளிலும், ஆந்திராவின் தெலுங்கானா பகுதியிலும் போதிய அளவு பருவமழை பெய்யவில்லை. இந்த பகுதியில் உற்பத்தி பாதிக்கப்படும்.

அதே நேரத்தில் பருத்தி ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஏற்றுமதி 95 லட்சம் பொதி என்ற அளவை எட்டிவிடும் என்று பருத்தி ஆலோசனை குழு மதிப்பிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்