வங்கி கடன் வட்டி அதிகரிப்பு!

வியாழன், 26 ஜூன் 2008 (14:32 IST)
வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டியை அதிகரித்துள்ளன.

வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தையும், வங்கிகளுக்கு அளிக்கும் கடன் மீதான வட்டியையும் அரை விழுக்காடு அதிகரித்தது ரிசர்வ் வங்கி.

இதை தொடர்ந்து வங்கிகள், அவை வழங்கும் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.

தனியார் துறை வங்கியான ஆக்ஸஸ் வங்கி (யூ.டி.ஐ. வங்கி) கடனுக்கான வட்டியை 0.50 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. இனி இது கடனுக்கு 15.25 விழுக்காடு வட்டி விதிக்கும். இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மாறும் வட்டி விகிதத்தில் வீட்டு கடன் வட்டியை 0.50% விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த புதிய வட்டி ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இனி 11 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும்.

ஹெச்.எஸ்.பி.சி. (ஹாங்காங் சாங்காய் வங்கி) வைப்பு நிதிக்கான வட்டியை 0.75 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கார்ப்பரேஷன் வங்கி தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி.சாம்ப மூர்த்தி, வங்கியின் சொத்து மற்றும் பொறுப்பு குழு விரைவில் வட்டியை பற்றி முடிவு செய்யும். வைப்பு நிதிகளுக்கும், கடன்களுக்கும் வட்டி உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

இதேபோல், பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.எஸ் நாராயணசாமி, வங்கியின் சொத்து மற்றும் பொறுப்பு குழு வருகின்ற 30ஆம் தேதி கூடி வட்டி உயர்த்துவது பற்றி முடிவு செய்யும். வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று கூறினார்.

பாங்க் ஆஃப் இந்தியா வங்கி அரை விழுக்காடு வட்டி உயர்த்தும் என்று தெரிகிறது.

சிண்டிகேட் வங்கியின் செயல் இயக்குநர் ஜார்ஜ் ஜோசப் கூறுகையில், நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வங்கியின் சொத்து மற்றும் பொறுப்பு குழு கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெறுகிறது. இதில் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பாரத ஸ்டேட் வங்கியும் வட்டியை அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதன் சொத்து மற்றும் பொறுப்பு குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் வட்டி உயர்வு பற்றி முடிவு செய்யப்படும்.

இதன் உயர் அதிகாரி கூறுகையில், ரிசர்வ் வங்கி ரிபோ விகிதம், ரொக்க கையிருப்பு விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வட்டி அதிகரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த வங்கி தற்போது கடனுக்கு 12.25 விழுக்காடு வட்டி வசூலிக்கின்றது. மூன்று வருட கால வைப்பு நிதிக்கு 8.75 விழுக்காடு வட்டி வழங்குகிறது.

தனியார் துறையின் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும் வட்டியை உயர்த்தப் போகிறது. இப்போது இந்த வங்கி கடனுக்கு 15.75 விழுக்காடு வட்டி விதிக்கின்றது. குறுகிய கால வைப்பு நிதிக்கு 8 விழுக்காடு வட்டி வழங்கி வருகிறது.

இதே போல் மற்ற வங்கிகளும் வட்டி விதிதத்தை அரை விழுக்காடு உயர்த்தும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்