பங்குச் சந்தை எப்படி?

செவ்வாய், 24 ஜூன் 2008 (10:56 IST)
பங்குச் சந்தையில் நேற்றும் பாதகமான நிலையே நிலவியது. காலை முதல் மாலை வரை தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் தொடர்ந்து நான்காவது நாளாக குறியீட்டு எண்கள் சரிந்தன. கடந்த 13 வருடங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கத்தின் உயர்வு, இதனை கட்டுப்படுத்த ரிசர்வ வங்கி எடுக்கப்போகும் நடவடிக்கை, அரசியல் குழப்பம் ஆகியவைகளால் பங்குச் சந்தை பாதிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி நேற்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த கூடிய நடவடிக்கை எடுக்க துவங்கி விட்டது. ரிசர்வ் வங்கி பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும். பணவீக்கம் அதிகரிப்பதால் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படும் என்று நினைக்கவில்லை என்று கூறினார்.

நேற்று காலையில் பங்குச் சந்தை துவங்கும் போதே குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. பங்குகளை அதிக அளவு விற்பனை செய்தனர். இதனால் குறியீட்டு எண்கள் சரிந்தது. நண்பகலில் சிறிது முன்னேறி சென்செக்ஸ் 350, நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரித்தது. ஆனால் இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் குறியீட்டு எண்கள் சரிந்தன.

உலோக உற்பத்தி, மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட், வாகன உற்பத்தி, குறிப்பிட்ட பெட்ரோலிய நிறுவனங்கள், மருந்து உற்பத்தி, வங்கி ஆகியவற்றின் பங்குகளின் விலை அதிக அளவு குறைந்தது.

இன்றைய நில

இன்று பங்குச் சந்தை தொடங்கும் போது கு‌றியீட்டு எண்களில் அதிக அளவு வேறுபாடு இருக்காது. நிஃப்டி 15 முதல் 20 புள்ளிகள் வரை குறையலாம். காலையில் நிஃப்டி 4245-4250 என்ற அளவுகளில் இருக்கும். நிஃப்டி 4280 புள்ளிகளுக்கு மேல் உயரவில்லை எனில், அதிக அளவு பங்குகளை விற்கும் போக்கை காணலாம். இதனால் 4230-4200 என்ற அளவிற்கு குறைந்து, மேலும் 4200 ஐ விட குறையலாம். இனி வரும் நாட்களில் நிஃப்டி 4050 என்ற அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது.

இதற்கு மாறாக நிஃப்டி 4280 என்ற அளவைவிட அதிகரித்தால், பங்குகளை வாங்குவதில் ஆர்வத்தை காணலாம். இதனால் நிஃப்டி 4300-4330 என்ற அளவை எட்டும். 4330 க்கும் மேல் சிறிது நேரத்திற்கு 4370-4400 என்ற அளவிற்கு உயர வாய்ப்புள்ளது.

இன்று ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஸ்டேட் வங்கி பங்குகளில் வர்த்தகம் நடக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்