எரிவாயு குழாய்: சீனாவிற்கு பாக். அழைப்பு!

வியாழன், 19 ஜூன் 2008 (13:36 IST)
ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தில் சேருமாறு சீனாவிற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு இயற்கை எரிவாயு கொணடுவர குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான்-ஈரான் இடையே பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த மாத இறுதியில், எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறினால், இந்தியாவிற்கு பதிலாக பங்கேற்குமாறு சீனாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சகத்தின் உயர் அதிகாரி கூறுகையில், பாகிஸ்தான் அதிபர் முஷாரப் சமீபத்தில் சீனாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது. சீன அதிபர் ஹூ ஜின்தாவோவிடம், 7.4 பில்லியன் டாலர் செலவிலான எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தில் சேருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சீனா இந்த திட்டத்தை பற்றி கூடுதல் விபரங்களை பாகிஸ்தானிடம் கேட்டு முதல் ஆய்வு அறிக்கையை கொடுத்துள்ளது.

சீனாவிடம் இந்த எரிவாயு குழாய் திட்டத்தை பற்றி விபரமாக ஆய்வு செய்யும் படி பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்