வங்கிகளில் அந்நிய முதலீட்டிற்கு தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு!

புதன், 7 மே 2008 (16:11 IST)
வங்கிகளின் பங்குகளை 74 விழுக்காடுவரை அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கும் மத்திய அரசின் அனுமதிக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கின் விவரம் வருமாறு :

தனியார் துறை வங்கியான டி.சி.பி. வங்கிக்கு, அந்நிய மூலதனத்தை 74 விழுக்காடாக அதிகரித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து மும்பை உயர்நீதி மன்றத்தில் இந்த வங்கியின் பங்குகளை வைத்திருக்கும் சலீம் அக்பரலி நான்ஜி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில் இந்த வங்கியில் அந்நிய மூலதனத்தை 74 விழுக்காடாக அதிகரித்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரூ.310 கோடி மதிப்பிலான முன்னுரிமை பங்குகளை அந்நிய முதலீட்டாளர்களுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியால் வங்கியின் மொத்த பங்குகளில் அந்நிய முதலீட்டாரின் வசம் இருக்கும் பங்குகள் 60 விழுக்காட்டில் இருந்து 67 விழுக்காடாக அதிகரித்துவிடும்.

அத்துடன் இந்தியாவை சேர்ந்தவர்கள் வசம் உள்ள பங்கு 23 விழுக்காட்டில் இருந்து 19 விழுக்காடாக குறைந்துவிடும்.

மத்திய அரசு, அந்நிய நாட்டை சேர்ந்தவர்கள் பலன் அடையும் விதமாக கொடுத்த பத்திரிக்கை அறிவிப்பு எண் 2 (2004 வருடம்) அடிப்படையில், ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இது அரசியல் சாசனப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும். அத்துடன் டி.சி.பி. வங்கிக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த அனுமதிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம் ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

இதை தொடர்ந்து சலீம் அக்பர் அலி நான்ஜி உச்சநீதி மன்றத்தில், இதை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி கே.சர்மா ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அமர்வு முன்பு நேற்று விசாரணாக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர். மும்பை உயர்நீதி மன்றம் மனுவை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்கும் படி கூறி, அவசரகால மனுவை தள்ளுபடி செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்