பார்தி ஆக்ஸா ஓய்வூதிய காப்பீடு திட்டம் அறிமுகம்!

வியாழன், 17 ஜனவரி 2008 (19:26 IST)
பார்தி ஆக்ஸா லைஃப் இன்ஷ்சூரன்ஸ் நிறுவனம் டிரிம் லைஃப் பென்ஷன் என்ற பெயரில் ஓய்வூதியத்துடன் கூடிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டம் பற்றி சென்னையில் இந்நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் வி. ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் உள்ளவர்கள் வங்கி சேமிப்பிற்கு பிறகு, ஓய்வு கால சேமிப்பாக ஆயுள் காப்பீடு செய்து கொள்வதே சிறந்தது என்று கருதுகின்றனர். அத்துடன் இந்தியாவில் இருப்பவர்கள் ஓய்வு கால செலவினங்களுக்கான திட்டத்தை, அந்த வயதை நெருக்கும் போதே திட்டமிடுகின்றனர். அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பொருளாதார நிலை பாதிக்கப்படாது அல்லது செழுமை அடையும் என்று கருதுவது எங்களது ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

மக்கள் தொகையில் ஐம்பது முதல் அறுபது விழுக்காடு வரை முன்னரே ஓய்வுகால நிதிக்கு திட்டமிடுவதில்லை. இவர்கள் 52 வயதுக்கு பிறகு திட்டமிட்டால் போதுமானது என எண்ணுகின்றனர்.

ஆயுள் காப்பீடு செய்து கொள்வதே, ஓய்வு கால சேமிப்பிற்கு சிறந்த வழி என்று வருவாய் ஈட்டக்கூடியர்களில் 75 விழுக்காடு நபர்களும், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களில் 55 விழுக்காடு நபர்களும் கருதுகின்றனர்.

நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள டிரிம் லைஃப் பென்ஷன் திட்டம் பல்வேறு தரப்பினருக்கும் சிறந்த திட்டமாக இருக்கும். இந்த திட்டத்தினால் அதிக வருவாய் கிடைப்பதுடன், பணவீக்கத்திற்கு சமமாக அதிக வருவாய் கிடைக்கும். ஓய்வு பெற்றதற்குப் பிறகும் வளமான வாழ்க்கை வாழலாம். இதில் குறைந்த வயதிலேயே காப்பீடு செய்து கொள்வதால், இது நீண்ட கால அடிப்படையில் அதிக லாபம் தருவதாக இருக்கும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்