விமான பெட்ரோல் வரியை குறைக்க வேண்டும்: பிரபுல் படேல்!

வியாழன், 17 ஜனவரி 2008 (11:26 IST)
விமான பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால், இதன் மீது விதிக்கப்படும் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் கேட்டுக் கொண்டார்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ள நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) பற்றி பல்வேறு அமைச்சர்களுடனும், பல்வேறு தரப்பினருடனும் ஆலோசித்து வருகிறார். நேற்று மத்திய விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேலுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரபு படேல் விமான பெட்ரோலிய விலை அதிகரித்து வருகிறது. இதனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் விமான பெட்ரோல் மீது விதிக்கும் பல்வேறு வரிகளை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அத்துடன் விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஒன்றுடன் மற்றொன்று இணைக்கப்படும் போது, வருமான வரி சலுகை வழங்க வேண்டும். இணைப்புக்கு முன்பு உள்ள நஷ்டத்தை, புதிய நிறுவனத்தின் கணக்கில் மாற்ற அனுமதி வழங்க வேண்டும்.

இந்த சலுகை தற்போது இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்ததற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை வருமான வரி 72 வது பிரிவின் கீழ் சட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதே சலுகையை மற்ற தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஒன்றாக இணையும் போதும் வழங்க வேண்டும்.

விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஆகும் மொத்த செலவில் பெட்ரோலுக்கு மட்டும் 40 விழுக்காடு செலவு ஆகிறது. இதன் விலை சர்வதேச சந்தைக்கும், இந்திய சந்தைக்கும் அதிக வேறுபாடு உள்ளது. இதன் மீது இந்தியாவில் இறக்குமதி வரி 10 விழுக்காடு, உற்பத்தி வரி 8 விழுக்காடு மற்றும் 23 விழுக்காடு விற்பனை வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை குறைக்க வேண்டும்.

முதல் வகுப்பு மற்றும் பிசினஸ் கிளாஸ் எனப்படும் உயர்தர இரண்டாம் வகுப்பு விமான பயணிகளுக்கு அவர்கள் செலுத்தும் பயண கட்டணத்தின் மீது சேவை வரி விதிக்கப்படுகிறது. இந்த சேவை வரி மற்ற நாடுகளில் விதிக்கப்படுவதில்லை. இதனால் இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்கள், அந்நிய நாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களுடன் போட்டி போட முடிவதில்லை. இந்த சேவை வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என்றும் பிரபு படேல், நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்