சிறு முதலீட்டாளர்களுக்கு சலுகை: செபி அனுமதி

வெள்ளி, 30 நவம்பர் 2007 (11:47 IST)
webdunia photoWD
பங்கு வெளியீட்டின் போது சிறு முதலீட்டாளர்களுக்கு 10 விழுக்காடு சலுகை விலையில் பங்குகளை ஒதுக்குவதற்கு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) அனுமதி அளித்துள்ளது.

தற்போது நிறுவனங்கள் வெளியிடும் பங்குகளில் குறிப்பிட்ட விழுக்காடு சிறு முதலீட்டாளர்களு்ககு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற விதி முறை உள்ளது.

சிறு முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீட்டு சந்தையில் பங்கு பெற, இவர்களுக்கு சலுகை விலையில் பங்கு ஒதுக்கீடு செய்யலாம் என்ற கருத்து சில ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தது. இதற்கு செபி தற்போது அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து செபியின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சுற்றிறிக்கையில், பொது பங்குகளை வெளியிடும் நிறுவனங்கள் சிறு முதலீட்டாளர்களுக்கு, சிறு பங்குநர்களுக்கு சலுகை விலையில் பங்கு ஒதுக்கீடு செய்யலாம். இந்த சலுகை மற்ற பிரிவினருக்கு பங்குகளுக்கு நிர்ணயிக்கும் விலையில் 10 விழுக்காட்டிற்கு மேல் அதிகரிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள செபியின் விதிகளின் படி எந்த பிரிவினருக்கும் சலுகை விலையில் பங்குகளை ஒதுக்கீடு செய்வதற்கு அனுமதி இல்லை.

சமீபகாலங்களில் வெளியிடப்படும் பொதுப்பங்குகளின் விலைகள் மிக அதிகமாக இருக்கின்றன. இவற்றின் பிரிமியம் அதிகளவு இருப்பதால் சிறு முதலீட்டாளர்கள் பங்குகளுக்கு விண்ணப்பிக்கவே தயங்குகின்றனர். அத்துடன் பெரும்பான்மையான பங்குகள் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் ஆகியோருக்கு அதிகளவு ஒதுக்கீடு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டே செபி சிறு முதலீட்டாளர்களுக்கு சலுகை விலையில் பங்குகளை ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்துள்ளது.

செபியி்ன் நடவடிக்கை பற்றி அசிகா பங்கு புரோக்கர் நிறுவனத்தை சேர்ந்த பராஸ் போத்ரா கருத்து தெரிவிக்கையில், இதனால் சிறு முதலீட்டாளர்கள் அதிக அளவு பொதுப் பங்குகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுவார்கள். சிறந்த பங்கு வெளியீடுகளில் சிறு முதலீட்டாளர்களும் பங்கேற்பது அவசியம். இந்த சலுகை அவர்கள் அதிக அளவு விண்ணப்பிக்க பயன்படும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்