ஓய்வூதிய நிதி பங்குச் சந்தையில் முதலீடு!

Webdunia

புதன், 28 நவம்பர் 2007 (15:40 IST)
மத்திய மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ஓய்வூதிய ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தற்போது மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஒய்வு பெற்ற பின்பு அரசே ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இந்த ஓய்வு ஊதியம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின், அவர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. அதற்கு பின் அவரின் மனைக்கு குறிப்பிட்ட விழுக்காடு வழங்கப்படுகிறது.

மத்திய மாநில அரசுகள் ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கும் ஓய்வு ஊதியம், தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் அளவிற்கு ஏற்றவாறு அதிகரிக்கின்றது. இவைகளினால் மத்திய, மாநில அரசுகளின் மொத்த வரி வருவாயில் அரசின் நிர்வாக செலவிற்கே பெரும் பாலான நிதி செலவாகின்றது.

பொதுமக்களிடம் இருந்து கசக்கி பிழியப்பட்டு வசூலிக்கப்படும் வரியை, அடிப்படை கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. இந்த அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றிடம் இருந்து மத்திய, மாநில அரசுகள் கடன் வாங்குகின்றன.

மொத்த வரி வசூலில் இருந்து நிர்வாக செலவினங்களை குறைக்கும் ஒரு முயற்சியாக மத்திய அரசு 2004 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய திட்டத்தின் படி அரசு ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் குறிப்பிட்ட விழுக்காடு ஓய்வூதிய நிதியாக செலுத்த வேண்டும். அரசும் இதற்கு சமமாக ஓய்வூதிய நிதியை செலுத்தும்.

இந்த மொத்த நிதி ஒவ்வொரு அரசு ஊழியரின் பெயரில் தனித்தனியான கணக்கில் பதிவு செய்யப்படும். இதை அரசு அல்லாத மற்ற ஒரு தனி அமைப்பு நிர்வகிக்கும். அத்துடன் அரசு ஊழியர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அரசு கடன் பத்திரம், பங்குச் சந்தை போன்றவைகளில் முதலீடு செய்யலாம்.
இந்த முதலீட்டை நிர்வகிக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில், அரசு ஊழியர் அவரின் ஓய்வூதிய நிதியை பராமரிக்க தேர்ந்தெடுக்கலாம். இதுவே புதிய ஓய்வூதிய திட்டம்.

இந்த ஓய்வூதிய நிதியை ஒழுங்கு படுத்தவும், மேம்பாடு அடைய செய்ய ஓய்வூதிய ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பெர்டா) என்ற சுயேச்சையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தலைவர் டி.சுவரூப் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதியில் 15 விழுக்காடு பங்கு சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். இந்த நிதியை நிர்வகிக்க பாரத ஸ்டேட் வங்கி, யூ.டி.ஐ பரஸ்பர நிதி, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவை நியமிக்கப்பட்டுள்ளன.

2004 ஆம் ஆண்டு ஜனவரி 1 ந் தேதிக்கு பிறகு பணியில் அமர்த்தப்பட்ட மத்திய, மாநில அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய நிதி கணக்கை பராமரிக்கும் பொறுப்பு நேஷனல் செக்யூரிட்டிரிஸ் டிபாசிட்டரி நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.

இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசும், 19 மாநில அரசுகளும் இடைக்கால ஏற்பாட்டில் இணைந்தன. தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் முழு அளவில் நடைமுறைபடுத்த மத்திய அரசுடன், 19 மாநில அரசுகளும் விரைவில் பங்கேற்க சம்மதம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இதில் சேருவதில்லை என்று மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டும் தெரிவித்துள்ளன.

இந்தி புதிய திட்டத்தின் ஊழியர்களின் ஓய்வூதிய பணம் முழு அளவு பங்குச் சந்தையில் இல்லாமல், அரசு கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம். இதற்கான விருப்பத்தை நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்களிடம் ஊழியர்கள் தெரிவிக்கலாம்.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் அரசு ஊழியர்கள் இணைவார்கள். இதன் மூலம் ஓய்வூதிய நிதி வருடத்திற்கு ரூ.1000 கோடி சேரும். இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் 10 விழுக்காடு செலுத்த வேண்டும். இதே அளவிற்கு அரசும் செலுத்தும். இந்த திட்டம் வருகின்ற ஜூன் மாதத்திற்கு பிறகு செயல்பாட்டிற்கு வரும் என்று சுவரூப் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்