மூத்த குடிமக்கள் கடன் (ரிவர்ஸ் மார்டேஜ்) விளக்கம்!

Webdunia

புதன், 24 அக்டோபர் 2007 (19:43 IST)
இப்போது வங்கிகள் 60 வயதை கடந்த மூத்த குடி மக்களுக்கு கடன் வழங்க தொடங்கியுள்ளன. எல்லா வங்கிகளும் ரிவர்ஸ் மார்டேஜ் என்று அழைக்கப்படும் அசையாத சொத்தின் மீது கடன் வழங்க துவங்கியுள்ளன.

* ரிவர்ஸ் மார்டேஜ் என்பது மூத்த குடிமக்களுக்கான திட்டம். இதன் படி 60 வயதை கடந்த ஒருவர் தனது சொந்த வீட்டில் குடியிருந்து கொண்டே அந்த வீட்டின் மீது அவரின் ஆயுள் வரை அல்லது அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை கடன் வாங்கலாம்.

* இதில் கடன் வாங்கும் மூத்த குடிமக்களுக்கு கடனை திருப்பி செலுத்தும் திறன் உள்ளதா என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

* இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறுபவர் இறந்தால் அல்லது அந்த வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறினால் மட்டுமே, அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்து விற்பனை செய்யப்பட்டு கடனும் வட்டியும் எடுத்துக் கொள்ளப்படும் அல்லது கடன் வாங்கியவரின் சட்டபூர்வ வாரிசுகள் அந்த கடனையும் அதற்குண்டான வட்டியியையும் செலுத்தி வீட்டை விற்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

* ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கடன் கொடுத்த வங்கி, அந்த சொத்தை மறுமதிப்பீடு செய்து, கடன், அதற்குண்டான வட்டியையும் சேர்த்தால் வரும் மொத்த தொகைக்கு, அந்த வீட்டின் மதிப்பு குறைவாக உள்ளதா அல்லது அதிகமாக இருக்கின்றதா என்று மதிப்பீடு செய்ய்பபடும்.

* இந்த கடனை ஒரே தவணையில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது மாத தவணைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

* இந்த கடனை வாங்கும் மூத்த குடிமக்கள், கடன் தொகையை மருத்துவ செலவு, வீட்டை புதப்பித்தல், பராமரிப்பு செலவு, மருத்துவ செலவு, கடன் அடைத்தல், மற்றும் குடும்ப செலவுக்காக பயன்படுத்தலாம்.

* இந்த கடன் மூத்த குடிமக்களின் வயதை பொறுத்து, அடமானம் வைக்கப்படும் சொத்தின் மதிப்பின் விகிதாச்சாரத்தில் வழங்கப்படும்.

இதன்படி 60 வயது முதல் 70 வயதிற்குள் உள்ளவர்களுக்கு சொத்தின் மதிப்பில் 45 விழுக்காடு கடன் வழங்கப்படும்.

- இதன்படி 71 வயது முதல் 75 வயதிற்குள் உள்ளவர்களுக்கு சொத்தின் மதிப்பில் 50 விழுக்காடு கடன் வழங்கப்படும்.

- 76 வயது முதல் 80 வயதிற்குள் உள்ளவர்களுக்கு சொத்தின் மதிப்பில் 55 விழுக்காடு கடன் வழங்கப்படும்.
- 80 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு சொத்தின் மதிப்பில் 60 விழுக்காடு கடன் வழங்கப்படும்.

* இந்த கடன் பெறுபவரின் வயது 60 தாண்டியதாகவும், அடமானம் வைக்கப்படும் சொத்து அவரின் பெயரில், வில்லங்கம் இல்லாமல் இருக்க வேண்டும்.

* இந்த கடன் குடியிருப்பு வீடுகளின் மீது மட்டுமே கொடுக்கப்படும். வர்த்தக சொத்துக்களுக்கு வழங்கப்படமாட்டாது.

சொந்தமாக அசையா சொத்து இருக்கும் மூத்த குடிமக்கள் வருவாய் இல்லாமல் கஷ்டப்படத் தேவையில்லை. தங்களை மகன் அல்லது மகள் கவனிக்கவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை. வீட்டின் மீது கடன் வாங்கி மருத்துவ செலவு உட்பட தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

அவர்களுக்கு பின் மகன் அல்லது மகள் வங்கிக்கு கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தி வீட்டை மீட்டுக் கொள்ளலாம்.















வெப்துனியாவைப் படிக்கவும்