நேரடி வரி வருவாய் 40 விழுக்காடு அதிகரிப்பு!

Webdunia

வெள்ளி, 19 அக்டோபர் 2007 (18:44 IST)
இந்த நிதியாணடின் முதல் ஆறு மாதங்களில் நேரடி வரி வருவாய் 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நிதியாண்டில் (ஏப்ரல் முதல் அக்டோபர் 15 வரை) நேரடி வரி வருவாய் 1 லட்சத்து 21 ஆயிரத்து 950 கோடி வசூலாகியுள்ளது. சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.86 ஆயிரத்து 751 கோடி வசூலானது.

நிறுவன வரியாக ரூ.75,549 கோடி வசூலாகியுள்ளது. இது சென்ற வருடத்தைவிட 40.29 விழுக்காடு அதிகம். சென்ற வருடம் ரூ.53,853 கோடி வசூலானது.

தனி நபர் வருமான வரி ரூ.46,320 கோடி வசூலாகியுள்ளது. இது சென்ற வருடத்தை விட 48.05 விழுக்காடு அதிகம். (சென்ற வருடம் ரூ.32,821 கோடி). பங்கு வர்த்தகத்தின் மீதான வரி ரூ.3,784 கோடி வசூலாகியுள்ளது. இது சென்ற வருடத்தை விட 48.05 விழுக்காடு அதிகம். (சென்ற வருடம் ரூ.2,556 கோடி). வங்கிகளில் பணப் பரிமாற்றத்தின் மீதான வரி ரூ.284 கோடி. இது சென்ற வருடத்தை விட 20.22 விழுக்காடு அதிகம். (சென்ற வருடம் ரூ.236 கோடி).

பிரிஞ்ச் பெனிபிட் வரி 2,326 கோடி. இது சென்ற வருடத்தைவிட 87.92 விழுக்காடு அதிகம் (சென்ற வருடம் ரூ 1,238 கோடி)

சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருமான வரியும், தனி நபர்கள் செலுத்தும் வருமான வரி 49 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதற்கும், ஊதியம் அதிகரித்திருப்பதற்கான அடையாளங்கள்.

வரிமான வரியில் முன்கூட்டியே செலுத்தும் (அட்வான்ஸ் டாக்ஸ்) வரி வசூல் 30 விழுக்காடு அதிகரித்திருப்பது, வர்த்தக, தொழில் துறைகளில் நல்ல லாபம் இருப்பதையும், பணப்புழக்கம் அதிகமாக இருப்பதற்கான எடுத்துக் காட்டு என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்