வைப்பு நிதிகளின் மீதான வட்டி குறையும் - சிதம்பரம்!

Webdunia

புதன், 1 ஆகஸ்ட் 2007 (18:17 IST)
வங்கிகளில் ஓராண்டிற்கு தொடர் கணக்கு (ஆர்.டி.), வைப்பு நிதிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் வட்டி விகிதம் 0.5 விழுக்காடு குறையும் என்று தான் எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார்!

புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், தற்பொழுது 10 விழுக்காடு வரை வட்டி அளிக்கப்படுகிறது என்றும், இது 0.5 விழுக்காடு குறையும் என்றும் கூறிய சிதம்பரம், இதனை சில வங்கிகள் குறைத்துள்ளதாகவும், பொதுவாக வைப்பு நிதிகளின் மீதான வட்டி விகிதம் 8.5 விழுக்காடு அளவிற்கு குறைந்து நிலைபெறும் என்று தனக்கு தோன்றுவதாகக் கூறியுள்ளார்.

பாரத அரசு வங்கி ஓராண்டு வரையிலான வைப்பு நிதிகளின் மீது அளித்து வந்த வட்டி விகிதத்தை 9.5 விழுக்காட்டில் இருந்து 9 ஆக குறைத்துள்ளது.

வணிக வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை 0.7 விழுக்காடாக இந்திய மைய வங்கி உயர்த்தியதன் காரணமாக வங்கிகள் தாங்கள் அளித்துவரும் வட்டியைக் குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புழக்கத்தில் அதிகப் பணம் இருப்பதே மைய வங்கியின் கவலை என்றும், அதன் காரணமாகவே வங்கிகளின் ரொக்க இருப்பை 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியதாகவும் கூறியுள்ள வங்கி வட்டாரங்கள், இதனால் 16,000 கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்து உள்ளிழுக்கப்படும் என்று கூறுகின்றன. (பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்