10 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி சாத்தியமே : சிதம்பரம்!

Webdunia

புதன், 18 ஜூலை 2007 (14:03 IST)
2008-09 நிதியாண்டில் 10 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்டுவது சாத்தியமே என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்!

புதுடெல்லியில் இந்தியா பாலிசி ஃபோரம் நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய சிதம்பரம், இந்த நிதியாண்டில் 10 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்டுவது கடினமானதுதான், ஆனால் அடுத்த நிதியாண்டில் அது சாத்தியமே என்று கூறினார்.

10 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்டுவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 5 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனையாக இருக்கும் என்று கூறினார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு என்பது சீனத்தின் 10 முதல் 10.5 விழுக்காடு வளர்ச்சிக்கு இணையானது என்று சிதம்பரம் கூறினார்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைப் பேரவை, இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக இருக்கும் என்று அருதியிட்டுக் கூறியுள்ளது. ஆனால், இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) அதன் ஆண்டு கொள்கை அறிக்கையில் 8.5 விழுக்காடாக பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கூறியுள்ளது.

இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முதலீட்டின் காரணமாக உந்தப்படுவதாக இருக்கும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைப் பேரவையின் தலைவர் சி. ரங்கராஜன் கூறியிருந்தார்.

9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்பது பருவ மழையைப் பொருத்தும், மற்ற அயல் சூழல்களைப் பொருத்தும் சற்று மாறுபடலாம் என்றும் ரங்கராஜன் கூறியிருந்தார்.

இந்த நிதியாண்டில் நமது விவசாய உற்பத்தி வளர்ச்சி 2.5 விழுக்காடாகவும், தொழிலக உற்பத்தி வளர்ச்சி10.6 விழுக்காடாகவும், சேவைத் துறையின் வளர்ச்சி 10.4 விழுக்காடாகவும் இருக்கும் என்று ரங்கராஜன் கூறியிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்