திருச்சி, தஞ்சையில் ஏரிகள் நிரம்பியதால் வெள்ள ஆபத்து!

தஞ்சை, திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 178 பெரும் ஏரிகளும், குளங்களும் நிரம்பிவிட்டதால் மேலும் மழை பெய்தால் அதனால் பெரும் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது!

வங்கக் கடலில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் திருச்சி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பிற்கு உள்ளானது.

திருச்சியையும், தஞ்சையையும் இணைக்கும் சாலையில் ஏரி ஒன்றில் இருந்து உடைத்துக் கொண்டு பாய்ந்த வெள்ள நீர் போக்குவரத்தை பாதித்தது. ஏற்கனவே, மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட வெள்ள நீரால் பாதிப்பிற்கு உள்ளான காவிரி மாவட்டங்கள், தொடர்ந்து பெய்த மழையால் மீண்டும் தத்தளிக்கின்றன.

திருச்சி, தஞ்சை, பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 178 பெரும் ஏரிகளும், குளங்களும் நிரம்பியுள்ளன. இவைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ள பொதுப்பணித்துறை, ஏரிக்கரைகளை கண்காணிக்கத் துவங்கியுள்ளது.

இம்மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. மழை விட்டு நீர் வடிந்த பிறகுதான் அவைகளின் விதி என்னவென்பது தெரியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்