மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. ஆனால் வர்த்தகம் தொடங்கிய பிறகு எல்லா பிரிவுகளிலும் ஏற்ற இறக்கமாக இருந்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 13,701.46 ஆகவும், நிஃப்டி 14 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4106.70 ஆக இருந்தது.
கடந்த வாரம் கடைசி இரண்டு நாட்களில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கணிசமான அளவு பங்குகளை வாங்கின. இன்றும் இதே நிலை தொடருமா என்பது கேள்விக்குறியது.
அத்துடன் அந்நிய நாட்டு சந்தைகளில் சாதகமான நிலை இருந்தாலும் மக்களவையில் மத்திய அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்கொள்கின்றது. அரசியல் அரங்கின் போக்கு பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கும். ஆதலால் இன்று பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்க வாய்ப்புண்டு.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 11.20 மணி நிலவரப்படி 849 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1,147 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 72 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 90.48 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 13,725.88 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 14.40 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4106.65 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 18.72, சுமால் கேப் 13.31 புள்ளி குறைந்தது. பி.எஸ்.இ. 500- 10.023 புள்ளி அதிகரித்தது.
வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,891.83 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,483.62 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.408.21 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,000.27 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,070.74 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.70.47 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 3,563.84 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.62,725.84 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பாவில் வெள்ளிக் கிழமை எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 90.10 புள்ளி அதிகரித்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 49.91 எஸ் அண்ட் பி500- 0.36 புள்ளி அதிகரித்தது. நாஸ்டாக் 29.52 புள்ளி குறைந்தது.
இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஜப்பான் பங்குச் சந்தையில் பாதகமான நிலை இருந்தது.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 54.78, ஹாங்காங்கின் ஹாங்சாங் 680.17, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 70.00, சீனாவின் சாங்காய் காம்போசிட் 35.39 புள்ளி அதிகரித்து இருந்தது. ஜப்பானின் நிக்கி 124.58 புள்ளி குறைந்து இருந்தது.