இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு

Webdunia

திங்கள், 10 செப்டம்பர் 2007 (11:45 IST)
அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடவு, சர்வதேச பங்குச் சந்தைகளில் சரிவை ஏற்படுத்தியதன் தொடர்ச்சியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகத்தில் பங்குகளின் விற்பனை அதிகரித்ததன் காரணமாக விலைகள் சரிந்தன.

ஆகஸ்ட் மாதத்திற்கான வேலை வாய்ப்பு அறிக்கை கடந்த வெள்ளி்க்கிழமை அமெரிக்க அரசால் வெளியிடப்பட்டதற்குப் பிறகு அந்நாட்டில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்புக் குறைவு, ஊதியக் குறைவு ஆகியன அந்நாட்டு பொருளாதாரம் சந்தித்து வரும் கடன் அழுத்தத்தால் ஏற்பட்டது என்பதனால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் இருந்து தங்களுடைய முதலீடுகளை திரும்பப் பெற மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அடுத்து இந்த சரிவு துவங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சரிவு ஆசியப் பங்குச் சந்தைகளான நிப்டி, ஹாங்சிங், சிங்கப்பூர் எஸ்.டி. ஆகியவற்றிலும் எதிரொலித்தது.

மும்பைப் பங்குச் சந்தை இன்று காலை 177 புள்ளிகள் குறைவாகவே வர்த்தகத்தைத் துவக்கியது. 15,413 புள்ளிகளாக துவங்கிய மும்பைப் பங்குச் சந்தை குறியீடு சில நிமிட வர்த்தகத்திலேயே மேலும் 50 புள்ளிகள் குறைந்து 15,363 புள்ளிகளுக்கு சரிந்தது.

தேசப் பங்குச் சந்தை குறியீடு 56 புள்ளிகள் குறைந்து 4,453 புள்ளிகளாக சரிந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்