பால் விலை உயர்த்த வேண்டும்

புதன், 24 டிசம்பர் 2008 (12:23 IST)
பழனி: பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தாவிட்டால், ஜனவரி முதல் வாரத்தில் பால் உற்பத்தி நிறுத்தப்படும் என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், பழனியில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்க தலைவர் செங்கோட்டுவேல் கலந்துகொண்டு பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு போதிய வசதிகள் இல்லை. கால்நடை மருத்துவர் வசதி, ஆவின் தீவனம் தட்டுப்பாடின்றி வழங்கல் போன்ற எந்த வசதியும் இல்லை.

பத்து நாள்களுக்கு ஒருமுறை தான் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. மேலும், ஒரு லிட்டர் பாலுக்கு 50 பைசா வீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுவரை பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும்.

பால் விலையை அதிகரிக்க வேண்டும். பசும்பால் லிட்டருக்கு ரூ.4, எருமைப் பால் லிட்டருக்கு ரூ.7 ஆக உயர்த்த வேண்டும்.

அத்துடன், பால் உற்பத்தியாளர்களுக்கு காப்பீடு வசதி செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக, இம் மாத இறுதிக்குள் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், ஜனவரி முதல் வாரத்திலிருந்து பால் உற்பத்தி நிறுத்தப்படும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்