வெள்ளை மிளகு ஊக்குவிக்க முடிவு

வியாழன், 18 டிசம்பர் 2008 (13:05 IST)
கன்னூர்: மிளகு தோட்ட விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வெள்ளை மிளகு உற்பத்தியை ஊக்குவிக்க கேரளா விவசாய பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது.

கேரளா விவசாய பல்கலைக் கழகத்திற்கு கன்னூர் மாவட்டத்தில் பன்னியூர் என்ற இடத்தில் மிளகு ஆராய்ச்சி நிலையம் உள்ளது. தற்போது கருப்பு மிளகு விலை குறைந்து வருவாதல், இதை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளது. இவர்களின் வருமானத்தை அதிகரிக்க வெள்ளை மிளகை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து பல்கலைக் கழகத்தின் விவசாய வளர்ச்சி மையத்தின் தலைவர் அப்துல் கரீம் கூறுகையில், இதை உற்பத்தி செய்து, பையனூர் வொயிட் கோல்ட் என்ற பெயரில் வெள்ளை மிளகுக்கு சந்தை ஆய்வு செய்யப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது 1 கிலோ கருப்பு மிளகு தூள் விலை ரூ.100 என்ற அளவில் உள்ளது. அதே நேரத்தில் வெள்ளை மிளகு தூள் விலை கிலோ ரூ.300 முதல் ரூ.400 என்ற அளவில் உள்ளது.

மிளகு செடியில் இருந்து மிளகு பறித்த உடன், மிளகு காயாமல் பச்சையாக இருக்கும் போதே. அதன் மேல் தோல் நீக்கப்படுகிறது. செடியில் இருந்து பறித்த மிளகை, தண்ணீரில் குறைந்த பட்சம் 10 நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு கர்நாடாகவைச் சேர்ந்த விவசாயி சஞ்சாய் ஹெக்டே தயாரித்துள்ள இயந்திரம் மூலம தோல் உரிக்கப்படுகிறது. இதற்கு ஆரம்ப கட்ட முதலீடாக ரூ.20 ஆயிரம் மட்டும் இருந்தால் போதுமானது.

கருப்பு மிளகு மேல் தோலில் தூசி, பூச்சி மருந்து, பூஞ்சை ஆகியவை இருக்கும். மிளகு தோல் உரிக்கபடுவதால் வெள்ளை மிளகில் இருக்காது. வெள்ளை மிளகு தூள் நல்ல மணமும், காரமும் இருப்பதால் அயல் நாடுகளில் சிறந்த வரவேற்பு உள்ளது. ஏற்றுமதி வாய்ப்பு அதிக அளவு இருப்பதுடன்,. விலையும் அதிகமாக கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்