நிலக்கடலை நீரில் மூழ்கியது.

சனி, 29 நவம்பர் 2008 (18:56 IST)
வாலாஜாபாத் ஒன்றியத்தில் தொடர் மழையால் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன.

வாலாஜாபாத்தை அடுத்துள்ள தென்னேரியில் நீர் மட்டம் 14 அடியாக உயர்ந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 18 அடி.

இதனைச் சுற்றிலும் 150 ஏக்கர் பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நிலக்கடலை பயிர் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளது.

தென்னேரி பகுதியில் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளது.

இதை விவசாயத் துறையினர் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்டக் கவுன்சிலரும், ஏரிப்பாசன சங்கத் தலைவருமான ஆர்.பாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் வேடல், கூத்திரம்பாக்கம் பகுதியில் சுமார் 500 க்கும் அதிகமான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீர் தேக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதே போல் பரந்தூர், கொட்டவாக்கம், சிறுவாக்கம், காரை, புரிசை பகுதிகளிலும் ஏராளமான விவசாயிகள், தற்போது தான் நாற்று நடத் தொடங்கி உள்ளனர். ஆனால் தொடர் மழையால் அப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வாலாஜாபாத் ஒன்றிய குழுத் தலைவர் பரந்தூர் சங்கர் கூறுகையில்,

எங்கள் ஒன்றியத்தில் மட்டும் 58 க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் இரண்டுக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன.

மழையால் ஏரிகள் உடைப்பு எடுக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் மீட்புப் பணிக்காக தேவையான ஆட்கள் உள்ளனர் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்