கரும்பு விலையை உயர்த்த வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை!

சனி, 22 நவம்பர் 2008 (14:57 IST)
புதுக்கோட்டை: சாகுபடி செலவும், தொழிலாளர்களின் கூலியும் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, கரும்பு கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்று கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டையில் நேற்று விவசாயிகளின் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த வருடம் அரசு கரும்பு டன் விலை ரூ.1,050 என அறிவித்துள்ளது. இது சென்ற வருட விலையை விட ரூ.16 மட்டுமே அதிகம். தற்போது அதிகரித்துள்ள சாகுபடி செலவுக்கும், கூலி உயர்வுக்கும், அரசு உயர்த்தியுள்ள ரூ.16க்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் உள்ளது.

இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜி.எஸ்.தண்டபானி கூறுகையில், விவசாய விளைபொருட்கள் விலை நிர்ணயிப்பு குழு, 9 விழுக்காடு சக்கரை சத்துள்ள கரும்பு டன்னுக்கு ரூ.1,550 வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது.

கரும்பு உற்பத்தி செய்ய அதிக அளவு செலவாகிறது. எனவே அரசு கரும்பு டன்னுக்கு ரூ.2,275 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மையான விவசாயிகள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நலனுக்காக தேசிய பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்