கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கு- விவசாயிகள் சாலை மறியல்!

செவ்வாய், 11 நவம்பர் 2008 (13:14 IST)
பொறையாறு : காவிரி கடைமடைப் பகுதியில் கருகும் நெல் பயிர்களுக்கு தண்ணீர் விடக் கோரி பொறையாறு அருகே இரு இடங்களில் விவசாயிகள் நேற்று சாலை மறியல் செய்தனர்.

நாகை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள ராஜீவ் புரம் மற்றும் காத்தான் சாவடி ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து, விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

பொறையாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடைமடைப் பகுதியான இங்கு காவிரி நீர் வரத்து இல்லாததாலும், மழை பெய்யாத காரணத்தாலும் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.

அத்துடன், காவிரியில் நீர் வரத்து இருந்த காலத்திலும் நீரை உரிய முறையில் பிரித்து விடாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்தாலும் தற்போது பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதியில் நெல் பயிர்களின் பாசனத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.

விவசாயிகளுடன், தரங்கம்பாடி வட்டாட்சியர் முத்துக்குமாரசுவாமி, பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் அவர்கள் வரும் 13 ஆம் தேதிக்குள் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனர்.

ராஜீவ் புரத்தில் விவசாய சங்கச் செயலர் தில்லை கோவிந்தராஜன் தலைமையிலும், காத்தான் சாவடியில் எருக்கட்டாஞ்சேரி விவசாய சங்கத் தலைவர் அர்ச்சுனன் தலைமையிலும் மறியல் நடைபெற்றது. இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் மறியல் போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த பகுதியில் உள்ள கடைகளும் அடைத்து, வியாபாரிகளும் மறியல் போராட்டத்திீல் பங்கேற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்