ஈரோட்டில் கூடுதலாக மஞ்சள் சேமிப்பு கிடங்கு!

புதன், 15 அக்டோபர் 2008 (18:02 IST)
ஈரோடு: ஈரோடு கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூடுதலாக ஆயிரம் டன் மஞ்சளை சேகரித்து வைக்கும் வகையில் இரண்டு கிடங்குகள் கட்டப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி தெரிவித்தார்.

ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அமைச்சர் கோ.சி.மணி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அவர் அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பிறகு பேசுகையில், இந்த விற்பனை சங்கத்தில், மஞ்சள் அதிகம் வரத்து வரும் காலங்களில் சேமித்துவைக்க கூடுதலாக இரண்டு கிடங்குகள் கட்டப்படும். இந்த கிடங்கு கட்ட சங்கத்தின் நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய மஞ்சள் கிடங்குகள் மூலம் 1000 டன் மஞ்சளை சேமித்து வைக்க முடியும். ஏல மையத்தில் மின்னணு தராசுகள் பயன்படுத்தப்படும். மஞ்சள் ஏலம் முடிந்து விவசாயிகள் பணத்தை கையில் எடுத்துச் செல்வதற்கு பதில், வங்கியில் செலுத்த வசதியாக, இந்த வளாகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்