அரிசி ஏற்றுமதி மீதான தடை விலக்கப்படும்-சிதம்பரம்!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (16:49 IST)
சிலவகை அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தற்காலிகமானதுதான் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

குர்கானில் உள்ள டில்டா ரைஸ்லாண்ட் என்ற நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகளை இன்று சிதம்பரம் திறந்து வைத்தார்.

அப்போது சிதம்பரம் பேசுகையில், சில வகை அரிசி ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடை தற்காலிகமானதே. அரிசி ஏற்றுமதி தடை விதிக்க வேண்டிய நிர்ப்ந்தம் ஏற்பட்டது. இந்த தடை முடிந்த அளவு விரைவில் நீக்கப்படும்.

நான் எந்த தேதியில் தடை நீக்கப்படும் என்று கூறமுடியாது. இது தொடர்பாக எவ்வித வாக்குறுதியும் கொடுக்க முடியாது. ஆனால் நிலைமை மாறிவருகின்றன. இந்த தற்காலிக தடையை நீக்க முடியும்

உலக பொருளாதாரத்தில் முதன் முறையாக எரிசக்தி, உணவு, நிதி ஆகிய மூன்று துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவை சில வகையில் இந்திய பொருளாதாரத்தையும் பாதித்தன. இதனால் பாசுமதி அல்லாத, அரிசி ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது என்று சிதம்பரம் தெரிவித்தார்.

உள்நாட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த, மத்திய அரசு ஏப்ரல் மாதம் பாசுமதி அல்லாத மற்ற வகை அரிசி ஏற்றுமதி செய்ய தடை விதித்தது நினைவிருக்கலாம்.

உலக அளவில் தாய்லாந்து, வியட்நாமிற்கு பிறகு அதிக அளவு அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


வெப்துனியாவைப் படிக்கவும்