மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு:

வியாழன், 18 செப்டம்பர் 2008 (10:42 IST)
மதுரை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்துவதற்காக ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆட்சியர் நேற்று அவர் கூறியதாவது:

மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த வனப்பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்வடிப் பகுதி கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகள் மூலம் வன வளம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பேணுதல், மண் அரிமானத்தைத் தடுத்து, விளைநிலங்களில் வேளாண் உற்பத்தியைப் பெருக்குதல், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக உசிலம்பட்டி மற்றும் பேரையூர் பகுதியைச் சேர்ந்த தொட்டப்பநாயக்கனூர், சீமானூத்து, உத்தப்பநாயக்கனூர், அல்லிகுண்டம், எருமார்பட்டி, ஜோதிநாயக்கனூர், மானூத்து, நல்லித்தேவன்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, பேரையம்பட்டி, சூலப்புரம் ஆகிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அப்பகுதி நீர்வடிப் பகுதிகளில் மண் வளப் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு பணிகளை, வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்துவத்கு ரூ. 57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் தரிசு மற்றும் விளைநிலப் பரப்புகளில் சம உயர வரப்புகள், உலர் தடுப்பணைகள், கசிவுநீர்க் குளங்கள் போன்றவை அமைக்கப்படும்.

இப்பணிகள் கிராம நீர்வடிப் பகுதி பயனாளிகள் சங்கங்கள் மூலம் பயனாளிகள் பங்களிப்புத் தொகையுடன் (ஆதிதிராவிட விவசாயிகள் சங்கம் 5 சதவிகிதம், இதர விவசாயிகள் சங்கம் 10 சதவிகிதம் பங்களிப்புத் தொகை) செயல்படுத்தப்படும்.

இந்த பங்களிப்புத் தொகையினை நீர்வடிப் பகுதி வளர்ச்சி நிதிக் கணக்கில் செலுத்தி, அதன் வட்டித் தொகை பராமரிப்புப் பணிகளுக்கு செலவு செய்யப்படும்.

ஆதிதிராவிட விவசாயிகளுக்காக திட்ட நிதி ரூ.4.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்