மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

வியாழன், 31 ஜூலை 2008 (13:35 IST)
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீ‌ரி‌ன் அளவு அதிகரித்துள்ளது.

காவிரி பாசன பகுதியின் விவசாய பணிக்காக மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்ற திங்கட்கிழமை 55 அடியாக குறைந்தது. இதில் 45 அடி வரை தான் தண்ணீர் திறந்து விட முடியும். இதனால் காவிரி பாசன பகுதியில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை அடைந்தனர்.

அத்துடன் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரதிறந்துவிடப்படுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்தது. இந்த மாவட்டங்களின் விவசாய பணிக்காக வழக்கமாக ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்நிலையில் சென்ற திங்கட்கிழமை காவிரி நீர் பிடிப்பு பகுதியாகுடகு பிரதேசத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து கனமழை பெய்ய‌த் துவங்கியது. இந்த பகுதியிலகாவேரி, கன்னிகா, சுஜ்யோதி ஆகிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த கனமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் மட்டம் திடீரென அதிகரித்தது.

இதை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர் வர‌த்தும் நேற்று முதல் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 10,094 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

இன்று காலை அணையின் நீர் மட்டம் 52.65 அடியாக இருந்தது. காவிரி பாசன பகுதியின் விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 12,015 கன அடி தண்ணீர திறந்து விடப்படுகிறது.

காவிரி ஆற்றில் விநாடிக்கு 510 கன அடி, வென்னாறில் 6051 கன அடி, கல்லணை கால்வாயில் 1804 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 810 கன அடி திறந்து விடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்