வளரும் நாடுகளுக்கு வரி விதிக்கும் உரிமை- ஜெனிவாவில் வலியுறுத்தல்!

வியாழன், 24 ஜூலை 2008 (14:28 IST)
ஜெனிவாவில் நடைபெற்று வரும் உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அரசு சாரா அமைப்புகள், சமூக நல அமைப்புக்கள் முக்கியான பொருட்களின் இறக்குமதி மீது வரி உட்பட மற்ற தீர்வைகளை விதிக்கும் உரிமை வளரும் நாடுகளுக்கு வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.

உலக வர்த்தக அமைப்பில் (WTO) விவசாய உற்பத்திப் பொருட்கள், தொழில் துறை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி-இறக்குமதி குறித்த பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடந்து வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் ஏற்படும் ஒப்பந்தம் இதில் உறுப்பினாரக உள்ள 156 நாடுகளையும் கட்டுப்படுத்தும். இதனால் இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதில் கலந்து கொள்ள வந்துள்ள ஆசியன் பார்மர்ஸ் குரூப் ஆப் கோவாபிரேஷன் (Asian Farmers Group on Cooperation) என்ற அமைப்பில் இடம் பெற்றுள்ள நேஷனல் கோவாபிரேஷன் யூனியன் ஆப் இந்தியா (National Cooperative Union of India) என்ற அரசு சாரா அமைப்பின் தலைவர் ஜி.ஹெச்.அமீன், உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் பாஸ்கால் லாமியை (Pascal Lamy) நேற்று சந்தித்தார் அப்போது அவரிடம், உலக வர்த்தக அமைப்பின் நகல் உடன்படிக்கையில் உள்ள ஷரத்துக்கள், வளரும் நாடுகளின் யதார்த்த தன்மையை பிரதிபலிப்பதாக இல்லை.

வளரும் நாடுகளில் இருந்து அதிக அளவு இறக்குமதி செய்யும் போது, உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்கும் வகையில் வளரும் நாடுகள் இறக்குமதி வரி உட்பட மற்ற தீர்வைகளை விதிக்க அனுமதிக்க வேண்டும். வளரும் நாடுகள் கேட்பது போல், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தற்போது வழங்கி வரும் அதிக அளவு மானியத்தை குறைத்துக் கொள்ள மறுத்து வருகின்றன என்று கூறினார்.

மற்றொரு அரசு சாரா அமைப்பான தேர்ட் வோல்ட் நெட்வொர்க் (Third World Network) இயக்குநர் மார்டின் கோர் கூறுகையில், இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளை, அவைகளின் கோரிக்கையை வலியுறுத்த வேண்டாம் அல்லது பேச்சுவார்த்தையின் தோல்வி அடைவதற்கு காரணமாக மாறுவீர்கள் என்று நிர்பந்திக்கின்றன. ஆனால் தற்போதைய நகல் உடன்படிக்கையின் விதிமுறைகள் விவசாய துறை, தொழில், சேவை துறைகளில் உள்ளவை, வளரும் நாடுகளுக்கும், வளர்ந்த நாடுகளுக்கும் இடையே சமநிலையில் இல்லை.

ஜெர்மன் நாட்டின் போஸ்டாம் (Potsdam) நகரில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்கா 17 பில்லியன் டாலர் அளவுக்கு மானியத்தை குறைத்து கொள்வதாக அறிவித்தது. ஆனால் தற்போதைய விவசாய நகல் உடன்படிக்கையில் அமெரிக்கா அதிக பட்சம் 13 முதல் 16.4 பில்லியன் வரை மானியத்தை குறைத்து கொள்ள அனுமதிப்பது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பாஸ்கால் லாமியிடம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்