மாநில பருத்தி கவுன்சில்!

திங்கள், 14 ஜூலை 2008 (14:31 IST)
ஜவுளித் துறையின் வளர்ச்சிக்காக பஞ்சாப் மாநில அரசு விரைவில் “மாநில பருத்தி கவுன்சில்” அமைக்கும் என்று முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.

இந்திய ஜவுளி சங்கம் சண்டிகரில் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கை சனிக்கிழமை நடத்தியது. இதை துவக்கிவைத்து பாதல் பேசுகையில், இந்தியாவிலும், பஞ்சாப் மாநிலத்திலும் ஜவுளி தொழில் வளர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

அதே நேரத்தில், இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாநில பருத்தி கவுன்சில், இந்த பிராந்தியத்தில் ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு பங்காற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

மாநில பருத்தி கவுன்சிலில் பருத்தி விவசாயிகள், ஜவுளி உற்பத்தியாளர்கள், பருத்தி விவசாய நிபுணர்கள், மாநில அரசு அதிகாரிகள் ஆகியோர் இடம் பெறுவார்கள். இதன் முக்கிய நோக்கம் பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதுதான்.

ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை வர்த்தகம் 440 பில்லியன் டாலர் அளவிற்கு உள்ளது. இது உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்திய உற்பத்தி துறையில், ஜவுளியின் பங்கு வகிக்கிறது. இது மொத்த தொழில் துறை உற்பத்தியில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கிறது. அத்துடன் விவசாயம், கிராமப்புற பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்பு உடையதாகவும் உள்ளது என்று பாதல் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்