கோதுமை கொள்முதல் 170 லட்சம் டன்!

வியாழன், 24 ஏப்ரல் 2008 (14:29 IST)
இந்த வருடம் 170 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்படும் என்று மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.

கோதுமை உற்பத்தியாகும் பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் ரபி பருவத்தின் கோதுமை விளைச்சல் திருப்திகமாக உள்ளது.

விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் கோதுமை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன் கோதுமை விலையை 1 டன்னிற்கு ரூ.1,000 ஆக உயர்த்தியுள்ளது.

இது போன்ற காரணங்களினால் இந்த வருடம் கோதுமை கொள்முதல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக இருக்கும் என்று சரத் பவார் கூறினார். மத்திய அரசு கொள்முதல் இலக்காக 150 லட்சம் டன் நிர்ணயித்துள்ளது.

புது டெல்லியில் நேற்று மாநில விவசாய அமைச்சர்களின் மாநாட்டை சரத் பவார் தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்த வருடம் 160 முதல் 170 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் தற்சமயம் கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய அவசிய்மில்லை என்று கூறினார்.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து கடந்த 10 நாட்களில் விவசாயிகள் மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டுவந்த கோதுமையில் 99.6 விழுக்காடு அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்துள்ளன.

இதுவரை மத்திய அரசு 86 லட்சம் டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளது. மத்திய அரசுக்காக இந்திய உணவு கழகம், மாநில நுகர்வோர் வாணிபக் கழகங்கள் கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபடுத்தபபட்டுள்ளன.

சென்ற வருடமும் மத்திய அரசு 150 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் 111 லட்சம் டன் மட்டுமே அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்ய முடிந்தது.

இதன் காரணமாக பற்றாக்குறையை ஈடுகட்ட 18 லட்சம் டன் கோதுமையை - உள்நாட்டு விவசாயிகளுக்கு வழங்கும் விலையை விட - அதிக விலை கொடுத்து அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்