ஹரியனாவில் பார்லி கொள்முதல்!

புதன், 16 ஏப்ரல் 2008 (14:41 IST)
ஹரியானா மாநில அரசு நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து 262 டன் பார்லி கொள்முதல் செய்துள்ளது.

இந்தியாவில் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பார்லி பயிரிடப்படுகிறது. பார்லி பயிரிட காற்றில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அதிக வெப்பம், குளிர் இல்லாத தட்ப வெட்ப நிலை நிலவ வேண்டும்.

இந்தியாவில் இமயமலையின் காற்று வீசும் பகுதியில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். ஹரியானாவில் இந்த மாதிரியான தட்ப வெட்ப நிலை நிலவுகிறது.

பார்லியில் பல்வேறு தாதுப் பொருட்களும், வைட்டமின் சத்தும் உள்ளன. ஹார்லிக்ஸ் போன்ற ஊட்டச்சத்து பானம், பிஸ்கட் ஆகியன தயாரிக்க பார்லி பயன்படுகிறது. அத்துடன் பீர் போன்ற மதுபானங்கள் தயாரிக்கவும் பார்லி பயன்படுகிறது.

ஹபீட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹரியான மாநில கூட்டுறவு விற்பனை இணையம் குர்கான் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 262 டன் பார்லி கொள்முதல் செய்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் பார்லி பயிரிடவும், இதை விற்பனை செய்யவும் வாய்ப்பிருப்பதை கருத்தில் கொண்டு, ஹரியான மாநில கூட்டுறவு விற்பனை இணையம், ஹரியான விவசாய விற்பனை பொருட்கள் வாரியம், எஸ்.கே.ஓ.எல். ப்ரிவ்ரிஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, விளைபொருட்களை திரும்ப வாங்கிக் கொள்ளும் அடிப்படையில், விவசாயிகளை பார்லி பயிரிட செய்தது.

இந்த வெற்றிகரமான திட்டத்தை பற்றி ஹபீட் நிறுவன அதிகாரி கூறியதாவது:

நாங்கள் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியுள்ளோம். விவசாயிகள் பார்லி பயிரிட்டால், நியாயமான விலையில் விளைச்சலை வாங்கிக் கொள்வதாக அறிவித்தோம். அதன்படி, குவிண்டால் ரூ.1,050 என்ற விலையில் கொள்முதல் செய்துள்ளோம். தற்போது சந்தையில் பார்லியின் விலையுடன் ஒப்பிட்டால், இது விவசாயிகளுக்கு இலாபகரமான விலை.

இந்த திட்டத்தின் படி எஸ்.கே.ஓ.எல். ப்ரிவ்ரிஸ் நிறுவனம், விவசாயிகளுக்கு தரமான விதைகளையும், மற்ற பொருட்களையும் வழங்கியது. அத்துடன் மண் வளம், மண்ணின் ஈரப்பதம் போன்ற தொழில் நுட்பங்களையும் வழங்கியது. பயிர் காப்பீடு செய்து கொள்ள விரும்பிய விவசாயிகளுக்கு, காப்பீடு கட்டணத்தில் (பிரிமியம்) 50 விழுக்காடு ஹபீட் செலுத்தியது.

இதுவரை விவசாயிகளிடம் இருந்து குர்கான் மாவட்டத்தில் பரூக் நகர், ஹய்லி என்ற இரண்டு ஊர்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் 262 டன் பார்லி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்