வெண்பட்டு நூல் உற்பத்தியில் தமிழக‌ம் முதலிடம்!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (13:24 IST)
''வெண்பட்டு நூல் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது'' என்று பட்டு வளர்ச்சிதுறை ஆணையர் ஹர்மந்தர்சிங் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்புக்கு பயன்படும் மல்பரி நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், பழனி உள்பட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பட்டுப்புழு வளர்ப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை பார்வையிடுவதற்காக நேற்று தமிழ்நாடு பட்டுவளர்ச்சி துறை ஆணையர் ஹர்மந்தர்சிங் திண்டுக்கல்லுக்கு வந்தார். அப்போது அவர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அள‌ி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தமிழ்நாட்டில் 2007-2008-ம் ஆண்டில் 10 ஆயிரம் ஏக்கரில் மல்பரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்பரி சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. தென்மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை போன்ற பகுதிகளில் மல்பரி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு ஏக்கர் மல்பரி சாகுபடி செய்ய சுமார் ரூ.ஒ‌ன்றரை லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

சில்க் பட்டு நூல் 1,300 டன் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 1,000 டன்னும், அதற்கு முந்தைய ஆண்டு 780 டன்னும் சில்க் பட்டு நூல் உற்பத்தி செய்யப்பட்டது. வெண்பட்டு, மஞ்சள் பட்டு என இருவகை உள்ளன. தமிழகத்தில் 330 டன் வெண்பட்டுநூல் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்திய அளவில் இது மிகவும் அதிகமாகும். தமிழகம் வெண்பட்டு நூல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் பட்டுநூல் தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான மத்திய அரசு ரூ.7 கோடியும், மாநில அரசு ரூ.5 கோடியும் மானியமாக ஒதுக்கி இருக்கிறது.

கடந்த ஆண்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.9 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒதுக்கப்பட்ட நிதி மூலம் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

இந்த ஆண்டு புதிதாக 34 ஆலைகள் தொடங்கப்பட இருக்கிறது. தென்மாவட்ட அளவில் 8 ஆலைகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆலைகளும் தொடங்கப்பட இருக்கின்றன. இதற்கான ரூ.1.25 கோடி மானியம் வழங்கப்பட உள்ளது எ‌ன்று அவ‌ர் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்