பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (13:07 IST)
webdunia photoWD
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இதே வருடத்தில் ஐந்தாவது முறையாக நிரம்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அணையில் இருந்து உபரி தண்ணீ‌ர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர் அணை. தென் இந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெயர் இதற்கு உண்டு.

இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். தமிழகத்தில் மேட்டூர் அணையை அடுத்து பெரிய அணையாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் உயரத்தில் சகதிகள் 15 அடியை கழித்து மொத்தம் நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும்.

கடந்த ஜூன் மாதத்தில் அணையின் நீர்மட்டம் 72 அடியாக இருந்தது. அதையடுத்து ஜூலை மாதத்தில் நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அணை நிரம்பியது. தொடர்ந்து ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய நான்கு மாதங்கள் நிரம்பி இதுவரை இல்லாத அள‌வி‌ற்கு 4 முறை முழுவது‌ம் ‌நிர‌ம்‌பி வரலாற்று சாதனை படைத்தது.

கடந்த மாதம் இறுதி வரை அணையில் மொத்தம் 102 அடி தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்க வேண்டும் என்பது பொதுப்பணித்துறை விதியாகும்.

காரணம் பருவமழை தீவிரமடைந்து அணைக்கு திடீரென தண்ணீர் வந்தால் அதை சமளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விதியை கடைபிடிக்கின்றனர்.
இதனால் கடந்த மாதம் இறுதிவரை அணையில் 102 அடி தண்ணீர் மட்டுமே தேக்கப்பட்டது.

தற்போது நவம்பர் முதல் தேதியில் இருந்து அணையில் 105 அடி தண்ணீர் தேக்கலாம். ஆகவே கடந்த மாத இறுதியில் பவானி ஆற்றில் தண்ணீர் விடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதை‌த் தொடர்ந்து நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 104.57 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் வந்தது.

இதனால் அணையில் இருந்து மேல்மதகுகள் மூலமாக பவானி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே வருடத்தில் தொடர்ந்து ஐந்து முறை பவானிசாகர் அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்